இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

1,794 . Views .

இங்கிலாந்துக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக 12/11/15 அன்று பிரித்தானியப் பிரதமரின் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. வெவ்வேறு இன மக்கள் ஒருமித்து மோடிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

ஒரு விதத்தில் மோடியின் லண்டன் வருகையானது பல்வேறு இன மத மக்களை ஒன்றினைத்துள்ளது எனலாம். நேபாளிகள் – தமிழர்கள் சீக்கியர்கள்- குஜராத்திகள் என பல இன மக்கள்கலந்துகொண்டு மோடிக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குஜராத் இனப்படுகொலை(2002) சீக்கிய இனப் படுகொலை (1984) என பல இரத்தக் கறை படிந்த கைகளைக் கொண்டதுதான் இந்து அடிப்படைவாத மோடி அரசு. அத்துடன் அல்லாமல் இன்றும் கூட முஸ்லிம்மக்களுக்கு எதிரான வன்முறை – தலித் மக்குளுக்கான ஒடுக்குமுறை போன்றனவற்றை சுளுளு…. மற்றும் பாரதிஜா ஜனதா கட்சி ஆகிய அமைப்புக்கள் தூண்டி வருகின்றன. இத்தகைய அடக்குமுறைகளுடன் தொடர்புள்ள ஒருவரை பிரித்தானிய அரசு வரவேற்று கொண்டாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் – இங்கிலாந்துவாழ் முற்போக்கு ஆசிய மக்களின் ஆதரவு இதற்கு இல்லை என்றும் தமது எதிர்ப்பை பேராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமது எதிர்ப்பை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தனர்.

படுகொலையுடன் தொடர்புடய மோடியை ஒருகாலத்தில் தனது நாடுகளுக்கு வர விடாமல் தடைவிதித்த அமெரிக்கா பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகள் மோடியை இன்று செங்கம்பளம்போட்டு வரவேற்பதற்க்கு முக்கிய காரணம் வியாபார ஒப்பந்தங்களே அன்றி வேறொன்றுமில்லை. முதலாளித்துவ சார்புடைய அதிகார வர்க்க்கங்கள் தமது சுயலாபங்களை முன்னிறுத்தியே செயற்படுமன்றி மக்கள் நலன் சார்ந்து இயங்காது என்பதே நிதர்சனமான உண்மை.
காஷ்மீர் இயக்கங்கள் நேபாளிய இயக்கங்கள் மட்டுமல்லாது தமிழ் சொலிடாரிட்டியும் மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமது பங்களிப்பையும் வெளிப்படுத்தியது. ஒடுக்கப்படும் அனைத்து இனமக்களுடனும் சேர்ந்து பணியாற்றுவது என்ற கொள்கையில் தமிழ் சொலிடாரிட்டி என்றென்றும் பயணிக்கும் என்பதற்கு இது ஒரு சான்றாகும். இத்தகைய போராட்டங்களின் மூலம் தமிழ் மக்களாகிய நாம் புரிந்துகொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள் பலவுண்டு. அரசியல்வாதிகளாலும் முதலாளித்துவ சக்திகளாலும் எமது போராட்டத்துக்கு தீர்வு ஆதரவு கிட்டப்போவதில்லை. ஆகவே போராட்டத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும் எமது போராட்டத்துக்கு அனைத்து இன மக்களின் ஆதவையும் திரட்ட வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதற்கு முதல் படியாக நாம் அவர்களது போராட்டங்களுக்கு சென்று எமது ஆதரவை வழங்கவேண்டும் அப்பொழுது தான் எமது போராட்டத்துக்கு அவர்களின் ஆதரவை எம்மால் வென்று எடுக்க முடியும்.

இது ஒரு நீண்ட கால அதே நேரம் நிலைத்து நிற்கக கூடியதுமான அரசியல் வழிமுறையாகும். ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டேயிருப்பார்கள். ஆட்சி மாறினாலும் அவர்களது மக்கள் விரோத கொள்கைகளில் மாற்றம் வரப்போவதில்லை. ஆனால் மக்கள் என்றென்றும் மக்களின் ஒட்டுமொத்த நலனில் அக்கறையுள்ளவர்களாக இருப்பர். அதனால்தான் அனைத்து இன மக்களின் ஆதரவையும் வென்றெடுக்க அவர்களுடன் சேர்ந்து இயங்குகிறது தமிழ்சொலிடாரிட்டி. அரசியல் அதிகார சக்திகளின் பலத்தை விட மக்கள் சக்தி எவ்வளவு பலம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளமக்கள் இத்தைகய போராட்டங்களுக்கு நேரடியாக சென்று தமது பங்களிப்பை வழங்கவேண்டும்.இதன் மூலம் மக்கள் போராட்டத்தின் உண்மைத் தன்மைகளை நேரடியாக கண்டு உணரமுடியும்.

இத்தகைய போராட்டங்கள் எது வித பலனையும் தராது என மக்களில் ஒரு சாரர் கருதலாம் ஆனால் உண்மை அதுவல்ல. மோடிக்கு எதிராக இந்தியாவில் இருந்து போராடும் மக்களுக்கும் அமைப்புகளுக்கும் இது ஒரு ஆதரவு சக்தியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. மோடிக்கும் எதிர்ப்பு உண்டு – ஒட்டு மொத்த இந்தியமக்களின் பிரதிநிதி மோடி அல்ல என்பதை இது மேற்குலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டும்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் லண்டலில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனதம்மைத் தாமே பறை சாற்றும் மற்றைய தமிழ் அமைப்புகள் ஒன்றும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் மோடியின் வலது சாரிய அரசியலில் நம்பிக்கை உள்ளவர்கள் அதனால்தான் மோடியை எதிர்க்கத்துணியவில்லை. இந்தியாவில் ஒடுக்குமுறையை மேற் கொள்ளும் மோடி அரசு பிரித்தானியாவில் வலது சாரிய ஆட்சியை மேற் கொள்ளும் கமேரோன் அரசு இவற்றுடன் இணைந்து எமது இனப்பிரச்சனைக்கு தீர்வு எட்டமுடியாது என்பதை இத்தைகைய அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும். போராட்டத்தை மக்கள் மத்தியில்கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து இன மக்களின் ஆதரவையும் வென்று எடுக்க வேண்டும் அதுவரை எமதுபோராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. மக்கள் உண்மைத் தன்மையை உணர்ந்து அனைத்து இன மக்களுடன் இணைந்து எமது போராட்டத்துக்கு வலுச் சேர்க்க வேண்டும்.

@கஜன்