இரு நாடுகள் – தமிழையும் பாவிக்க(லாம்) பகுதி 2

(லியோனல் போபகே திருமண படம் – விஜவீர, சிங்கமபாணர்)
  • சேனன்

எனவா என்றால் – வா, வருதல் என சிங்களத்தில் பொருட்படும். கிழக்கு மாகான கூட்டத்தில் ராஜாக்ச சொன்னது வெனவா. அதை நடக்கிறது என பொருட்படுத்தலாம். டம் என்பது மாறி டும்மாகி விட்டது என சற்று வெட்கத்துடன்தானே சனாதிபதி கூறினார். இது மொழி விளங்காமை. சிங்களத்தை விளங்கி கொண்டு பேசுங்கள் என சிலர் அறிவுறுத்தலாம்.

ஆம் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு சிங்களம் தெரியாது. தமிழில் மட்டும் பேசும் ஒருவர் இலங்கையில் சனாதிபதி ஆகிவிடவும் முடியாது. முன்னுக்குப் பின் முரணான சிங்களம் பேசிக்கொண்டு அரசின் எந்தப் பெரும் பதவியிலும் இருக்க முடியாது.

‘ஒற்றுமையாக இருக்க வேண்டாம்’ என்ற தமிழ் சொற்கள் ராஜபக்சவின் வாயில் இருந்து தானாக வந்ததன் முரண்நகையை தமிழ் பேசுபவர்கள் ரசிக்காது இருக்க முடியாது. பின் வந்த சிங்களத்தை சரியாக விளங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கவில்லை. இடைவெளியை நிரப்பிக் கொண்டு வசனங்களை அவர்கள் கோர்த்துக் கொண்டார்கள்.

டம் வெனவா டும் வெனவா

– அதன் உண்மை அர்த்தம் பற்றிய அக்கறை யாருக்குத் தேவை.

‘அலுவல் மொழிச் சட்டம்’ (உத்தியோக மொழிச் சட்டம்). என்பதுதான் 1956 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் உண்மைப் பெயர். ஆனால் ‘தனிச் சிங்கள சட்டம்’ என்பதுதான் தமிழ் பேசும் மக்களுக்கு தெரிந்திருந்தது.

இலங்கையர் என்பவர் சிங்கள மொழி பேசுபவர்.

சிங்களம் மட்டுமே இலங்கையின் அலுவல் மொழி.

எந்த அலுவலகத்திலும் சிங்களம் பேசுபவருக்கு மட்டுமே முதன்மை இடம்.

தமிழ் மட்டும் பேசுபவர்கள் என்ன செய்வது ? எங்கு ‘அலுவல்’ பார்ப்பது?

ஆ… அது வேறு நாடு அல்லவா. அதைப் பற்றி யாருக்கு கவலை.

தமிழ் மக்களின் மொழி உரிமையை காக்கிறோம் என வந்திறங்கிய இந்திய இராணுவத்தின் பிடியில் உருவான 1987 பதின்மூன்றாம் திருத்ச் சட்டம் சிங்கள மொழிதான் அலுவல் மொழி என்பதை உறுதிப் படுத்தியது.

தமிழையும் உத்தியோக பூர்வமாக பாவிக்கலாம்.

பாவிக்கலாம். லாம் வெனவா…

கொழும்பு பல்கலைக் கழகத்தில் பல தமிழ் மாணவர்கள் படிக்கிறார்கள். வடக்கு கிழக்கில் இருந்து வரும் பல மாணவர்கள் திசை தெரியாது ஓடித் திரிவதை பார்க்க முடியும். சிங்களத்தில் மட்டும் எழுதப்பட்டிருக்கும் இடங்களையும் தகவல்களையும் ஊகிக்க அவர்கள் சிரமப்படுவர். இன்னொரு நாட்டுக்குச் சென்றால் அந்த நாட்டு மொழியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும்தானே – அதைச் செய்யட்டும்.

1948 பெப்ரவரி 4 ஆந் திகதி இலங்கைக்கு ‘சுதநிந்திரம்’ கிடைத்து விட்டதாகச் சொல்கிறார்கள். அந்தச் சுதந்திரத்தை எந்த மக்களுமே இன்னும் சுவாசிக்கவில்லை. தமிழ் மட்டும் பேசுவோர் பக்கம் அந்தச் சுதந்திரக் காற்று நெருங்கவே இல்லை. தமிழ் மட்டும் பேசிகொண்டு தெற்கின் அதிகார மையத்தின் உச்சம் சென்ற ஒருவரை – ஒரு மனிதரை – யாரும் காட்ட முடியாது.

இந்த நாட்டில் அதற்கு அவசியமில்லை.

ஜனதா விமுக்தி பெரமுன என்ற சிங்கள பெயரில் இலங்கையில் இயங்கும் இயக்கத்தின் தமிழ் பெயர் பெருபான்மை தமிழ் மக்களுக்குத் தெரியாது. ஜே வி பி என்ற எழுத்துக்கள் மூலம் மட்டுமே அவர்கள் அறியப்படுகிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரை சொன்னால் ஏதோ தமிழ் இயக்கம் என பலர் எண்ணி விடுவார்கள் – ஜே வி பி ஞாபகத்துக்கு வாராது.

ஜே வி பி ஒருபோதும் தமிழ் அமைப்பாக இயங்கியதில்லை. அது சிங்கள கட்சி என்றுதான் அறியப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியில் மோசமாக வேர் ஊன்றி உள்ள தமிழ் தேசியம்தான் அதற்குக் காரணம் எனவோ அல்லது அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வு பெரிதளவில் வரவில்லை எனவோ சொல்லி தட்டிக் கழித்து விட்டுச் செல்ல முடியாது. இருப்பினும் 2024ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த ‘சிங்கள கட்சிக்கு’ தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் வாக்குக்களை வழங்கினர்.

ஜே வி பி ஒரு காலத்தில் ஆயுதம் தாங்கிய அமைப்பு. அதனால் அவர்களுக்கு எமது வலி புரியலாம் என சிலர் எண்ணி இருக்கலாம். ராஜபக்ச குடும்பத்தை தூக்கி எறிந்த அரகலய போராட்டத்தின் பக்கம் தாமும் இருப்பதாக காட்டிக்கொண்ட அவர்கள் மேல் நல்லது செய்வர் என்ற அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கலாம். பொருளாதாரத்தை நிமிர்த்த இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்து பார்ப்போம் என அவர்கள் எண்ணி இருக்கலாம். ஆனாள் ஜே வி பி சொன்ன காரணம் வேறு.

தேர்தல் முடிந்த கையோடு – தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயிரக் கணக்கில் வாக்குகள் விழுந்து இருக்கு என தெரிய வந்த கையோடு – பல ஆதரவாளர்கள் பெருமிதத்தில் கத்தினர்.

‘தமிழ் மக்களின் தேசியக் கோரிக்கை முடிந்து விட்டது.’

‘தமிழ் மக்களுக்கு பொருளாதார நலன்தான் முதன்மைக் கரிசனை. தமிழ் தேசியம் செத்துவிட்டது’.

தேசியத்தை காவித்திரிந்த மக்கள் செத்தது உண்மைதான். அந்த சாவோடு தேசியக் கோரிக்கையும் செத்துவிட்டதா?

இதற்கு பதில் அடுத்த தேர்தலில் ஓரளவு கிடைத்து விட்டது. இருப்பினும் இந்த கேள்விக்கு பின்னால் இருக்கும் பிரிவினைவாதம் – இனத்துவேசம் – உரிமை மறுப்பு அவதி – மிரட்டல் – வரலாற்று ஒடுக்குமுறையின் கனதி – ஒரு மொழி ஒரு இன நிலைப்பாடு – ஆகியவற்றை நாம் ‘மொழி’ பெயர்க்க வேண்டி உள்ளது. பல கேள்விகள் எமக்கு உண்டு.

ஆனால் அந்த கேள்விகளைக் கேட்டு பிரியோசனம் இல்லை. தீவிர வாதத்திற்கு ஆதரவு – தீவிர தமிழ் தேசியவாதிகள் என ஒற்றை வார்த்தையில் ஒதுக்கி விட்டுச் செல்வீர்கள் என தெரியும்.

ஆனால் நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டிய கேள்விகள் பல உண்டு.

டொன் நந்தசிறி விஜயவீர என்ற இளம் பொடியனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

ரோகன விஜயவீர என்றும் அறியப்பட்ட அந்த இளம் பொடியனை ஞாபகம் இருக்கிறதா?

தமிழில் வீணாக அதிக துண்டுப் பிரசுரங்களை அடித்தமையால் கட்சியில் இருந்து விலகி புதிதாக ஜே வி பி என்ற கட்சியை அவர் தோற்றுவித்தார் என பல கம்யுனிச கட்சி ஆதரவாளர்கள் அடிக்கடி பேசி இருக்கிறார்கள். சிங்களம் நன்றாக பேசிய சண்முகதாசன் என்ற தமிழரின் தலைமையில் இருந்த கட்சி தமிழ் கட்சியாக சுருங்கி விட்டது –அதிலிருந்து வெளியேறிய ஜே வி பி சிங்கள கட்சியாக வளர்ந்தது. இந்தக் கட்சி ஆரம்பத்தில் இருந்தே தமிழில் இயங்கவில்லை.

ஆரம்ப காலத்தில் ஜே வி பி யின் பொதுச் செயலாலராக இருந்த லயோனல் போபாஜி தற்போதும் உயிரோடு இருக்கிறார். வடக்கு கிழக்கில் ஜே வி பி அமைப்பு கட்டும் பொறுப்பில் தான் இருந்ததாக கூருகிறார். கிளிநொச்சியில் இருந்து கண்டி வரை சில ஆதரவு கட்ட முடிந்தது என்கிறார். ஏன் என்றால் அந்தக் காலத்தில் சம மொழி உரிமை நிலைப்பாட்டை அவர்கள் எதிர்க்கவில்லை – சுய நிர்ணய உரிமையை ஆதரித்தனர் என்கிறார். அவர் ஓடி ஓடி அமைப்பு வேலை செய்ய ஆரம்பித்த தருணத்தில்தான் அவருக்கு தெரிய வந்தது – தான் இருந்த அமைப்பு ஒரு துவேச அமைப்பு என்று. போபகே ஒரு மார்க்சிய அமைப்பில் சேருகிறோம் என எண்ணித்தான் சேர்ந்தார். அவர் எதிர்ப்பார்த்த லெனினிச கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு பேரினவாதத்தை முன்னிறுத்தியது கட்சி. அவரது தமிழ் தோழர்கள் தமிழ் தேசியத்துக்கான ஆயுத போராட்டத்தில் குதித்தனர். அவர் 1984 ம் ஆண்டு கட்சியை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியாவிற்குத் தப்பி ஓடினார்.

அவர் தப்பி ஓடிய காலப் பகுதியில்தான் ஜே வி பி ஈழ கோரிக்கை பற்றிய ஒரு புத்தகத்தை சிங்களத்தில் வெளியிட்டது. ஜே வி பி யின் தலைவர் விஜயவீர தான் ஒரு மார்க்சியர் என முழுமையாக நம்பினார். இனவாதம் – பேரினவாதம் ஆகியவை கலந்த தேசிய சோஷலிச கருத்துக்களை ‘மார்க்சியம்’ என விளம்பரம் செய்த காலத்தில் கற்றவர் அவர். அந்த போதாமை தெரிந்தும் அதில் இருந்து அவர் மீறவில்லை. அவர் நிறைய எழுதியவர் அல்ல. ஆயுத எழுச்சி பற்றி அவர் எழுதிய குறிப்புகளைத் தவிர அவர் எழுதிய ஒரு சிறு புத்தகமாக கருதப்படும் ‘ஈழக் கோரிக்கைக்கு தீர்வென்ன’ என்ற புத்தகம் இன்றுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. அப்படி ஓன்று இருந்து யார் கண்ணிலாவது பட்டால் சொல்லுங்கள்.

ஈழக் கோரிக்கை என்பது ஏகாதிபத்திய சதி என்பதகாக அவர் அந்த புத்தகத்தில் வாதித்ததாக தெரிய வருகிறது (சிங்களம் தெரிந்தவர்கள் சிலர் -மற்றும் கே ரி ராஜசிங்கம் முதலானவர்கள் இது பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்). இந்தியாவையும் இலங்கையையும் உடைப்பதற்கு அமெரிக்கா வேலை செய்கிறது என்றும் – தமிழ் பிரிவினைவாத ஆயுத குழுக்கள் அமெரிக்காவுடன் வேலை செய்கின்றன எனவும் அவர் அதில் வாதிட்டுள்ளார். தமிழ் நாட்டு திராவிட முன்னேற்ற கழகமும் (தி மு க) அமெரிக்காவுக்கு வேலை செய்கிறது என்றும் அதனால்தான் அவர்கள் தமிழ் பிரிவினை வாதிகளோடு இணைந்து வேலை செய்கிறார்கள் என்றும் வாதிட்டுள்ளார். சோழ ஆட்சியை போல் ஆக்கிரமிப்பதற்கே புலிகள் புலிக்கொடியை தெரிவு செய்துளார்கள் என்றும் பத்தாம் நூற்றாண்டு பதமான ‘ஈழம்’ என்பதை பாவிக்கிறார்கள் எனவும் விளக்கம்  கொடுத்துள்ளார். அண்ணாத்துரையும் கருனாநிதியும் சேர்ந்து பரந்த திராவிட நாட்டை உருவாக்கும் நோக்கத்தில் இயங்குகிறார்கள் என விளக்கி உள்ளார்.

இதே சமயம் அமெரிக்காவுடன் இருக்கும் இலங்கை அரசை வீழ்த்த தமிழ் பிரிவினையை வளர்கிறது இந்தியா. இலங்கை அரசை நாம் வீழ்த்தினால்தான் தமிழ் நாட்டில் இயங்கும் தமிழ் பிரிவினைவாத முகாம்களை மூட முடியும் எனவும் அரச எதிர்ப்புக்கு ஆட் சேர்த்துள்ளார்.

இந்திய எதிர்ப்பு ஜே வி பி யின் முக்கிய அரசியற் பாடங்களில் ஓன்று. இந்த இந்திய எதிர்ப்பின் அடிப்படை அரசியல் பணி – மலையாக மக்களை எதிர்ப்பதாக இருந்து வந்திருக்கிறது. அவர்களை ஐந்தாவது அணி – அதாவது தமது நாட்டுக்குள்  இருந்து கொண்டு எதிரி நாட்டுக்கு வேவு பார்க்கும் கூட்டம் – என அழைத்து வந்திருக்கிறது ஜே வி பி.

இலங்கையில் நடந்தது ‘உள்நாட்டு போர்’ என்றும் அதற்கு காரணம் புலிகள்தான் எனவும் இன்றுவரை பிரச்சாரம் செய்து வருகிறது ஜே வி பி. அவர்களது இணையத்தளம் இப்போதும் சொல்கிறது ‘1983 ஜூலையில் ஒரு சக்திவாய்ந்த கண்ணிவெடி வெடித்து ஒரு இராணுவ லாரி வெடித்து 13 வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர் உள்நாட்டுப் போர் தொடங்கப்பட்டது.’

இவ்வாறு ஒரு இயக்கம் பிரச்சாரம் செய்து வந்தது – ஈழ கோரிக்கை பற்றிய அவர்தம் நிலைப்பாடு எதுவுமே வடக்கு கிழக்கு மகளுக்கு தெரியாது – இன்றுவரை இது பொது புத்தியில் இல்லை. மலையக மக்கள் மேல் அவர்கள் செய்த அவதூறுகள் அந்த மக்களுக்கு இன்றுவரை முழுமையாகத் தெரியாது.

ஏனெனில் அவர்கள் வேறு நாட்டில் வாழ்ந்து கொண்டிருத்தார்கள்.

வேறு மொழி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் போராட்டம் வேறாக இருந்தது.

அவர்கள் ஜே வி பி யில் இணைவதை நிறுத்தினர். இருந்தவர்கள் விலத்தினர்.

இவ்விடத்தில் விஜயவீர சொன்னதையே நாம் திருப்பிச் சொல்ல வேண்டி உள்ளது. ஒரு காலத்தில் தமிழ் இளையோரும் ஜே வி பி யில் இணையத் தயாராக இருந்த காலத்தில் வழங்கிய பேச்சு இது.

ஆயுதம் தாங்கிய ‘எழுச்சியை’ (தற்போதைய ஜே வி பி மொழியில் சொல்வதனால் ‘தீவிரவாத நடவடிக்கையை’) 1971 ல் முன்னெடுத்தது ஜே வி பி. அதன் தலைவர் விஜயவீர அந்த எழுச்சியை தடுப்பதற்காக இலங்கை அரசால் கைது செய்யப்பட்டார்.  வடக்கில் – யாழ் சிறையில் அடைக்கப்பட்டார். அச்சமயத்தில்தான் அந்த புகழ் பெற்ற பேச்சை அவர் நீதி மன்றத்தில் வழங்கினார்.

விஜயவீர சொன்னார்:

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல்வாதிகள் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான வகுப்புவாத முரண்பாட்டின் கிருமிகளை வெட்கமின்றி வெளிப்படுத்தினர். 1956 தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியும், சமசமாஜக் கட்சியும் மொழிப் பிரச்சினையில் சமத்துவத்திற்காக நின்றன. ஆனால் சிறிது காலத்திற்கு பிறகு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் தமிழுக்கும் சிங்களத்துக்கும் இடையிலான சம அந்தஸ்தை எதிர்ப்பது மட்டுமல்லாமல், குறைவான உரிமைகளை வழங்குவதை கூட எதிர்த்தனர். .”

அவர் மேலும் சொன்னார்:

“இந்த நிலைமைகளில்தான் நாங்கள் அவர்கள் மீது ஏமாற்றமடைந்தோம். அதனால்தான் நாங்கள் போராடினோம். யாராவது விருப்பத்துடன் தனது உயிரைப் பணயம் வைத்தால், அல்லது கைதியாகக் கட்டப்படத் தயாராக இருந்தால், இதற்கு மாற்று வழி இல்லை என்பதால் மட்டுமே இது நிகழ முடியும்.”

ஆம் விஜயவீர வேறு வழியின்றித்தான் சில ‘தீவிர’ போராட்டங்கள் வெடிக்கின்றன.

அவர் சொன்னார்: நாமும் சொல்கிறோம்.

‘நாம் கொல்லப்படலாம். ஆனால் எமது குரல் ஒருபோதும் சாகாது’.