முதலாளித்துவம் இந்திய தொழிலாள வர்க்கத்திற்கான எந்தவித எதிர்காலத்தையும் வழங்காது என்பதை கோவிட் நெருக்கடி காட்டுகிறது

(AP Photo/Tsering Topgyal)
3,331 . Views .

கோவிட் -19 தாக்கம் மற்றும் அரசின் தலையீடு:

முதலாளித்துவ இந்தியாவின் கோர முகம், கொரோனா நெருக்கடியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு பட்டினிச்சாவு என்பது தினசரி அச்சுறுத்தல். இந்தப் பெரும்தொற்று முதலாளித்துவ சார்பு அரசியல்வாதிகள் மற்றும் கட்சிகளின் சீரழிந்த நிலையை அம்பலப்படுத்தியதோடு, இடது சாரிகளின் பெரும் தோல்வியையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை நசுக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை ஒழுங்கமைக்கக் கூடிய ஒரு திட்டத்தை வழங்குவதிலிருந்து பல ஆண்டுகளாக பின்வாங்குவதன் விளைவு, தெளிவாகியுள்ளது.
கோவிட் -19 தொடர்பான இறப்புகள் மற்றும் இந்த நோயினால் ஏற்பட்ட தாக்கங்கள் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளன. அப்படியிருந்தும் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 100,000 க்கும் அதிகமானோர் இதுவரை இறந்துவிட்டதாகவும் கூறுகின்றன. உலகின் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முதல் மூன்று நாடுகளில் இந்தியா உள்ளது. தனியார்மயமாக்கப்பட்ட சுகாதாரத் துறை, தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு, கொரோனா நெருக்கடியை இன்னும் மிகைப்படுத்தியுள்ளது. நகர்ப்புறத்தில் சராசரி ஆண் ஊதியம் ஒரு நாளைக்கு £ 7 க்கு குறைவாகவும் கிராமப்புறங்களில் இது ஒரு நாளைக்கு £ 1 ஆக இருக்கும் நாட்டில் நோயாளிகள் சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு £ 1,800 முதல் £ 10,000 வரை செலவழிக்க வேண்டியுள்ளது.

நாட்டில் உள்ள வறுமை, சீர்கெட்ட சமூக-பொருளாதார நிலை இப்பெரும் தொற்றை இன்னும் மோசமாக்கியுள்ளன. இந்தியா எதிர்கொண்டு இருக்கும் இச்சூழ்நிலைக்கு அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கிய காரணியாகும். பிரபல பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ், “இந்தியாவில் கோவிட் -19 இன் அழிவுகரமான விளைவுகள் நோயின் விளைவாக மட்டும் இல்லை, ஆனால் அரசாங்கம் இந்நோய்க்கு பதிலளித்த தன்மையே மேலும் அழிவை கொண்டு வந்துள்ளது” என்கிறார். கொடூரமாக செயல்படுத்தப்பட்ட லோக்டவுனே இப்பெரும் தொற்று தீவிரமடைய ஏதுவாக அமைந்தது என சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் 95 % தொழிலாளர்கள் முறைசாரா துறையில் (Informal Sector) உள்ளனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் இத்தகைய குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கு சமூக இடைவெளி என்பது எண்ணிப்பார்க்க முடியா ஆடம்பரம். லோக்டவுன் காரணமாக தங்கள் ஊர்களுக்கு திரும்ப நிர்பந்திக்கப்பட்ட பலரில் நூற்றுக்கணக்கானோர் வழியிலேயே இறக்க நேர்ந்தது. இன்னும் சிலர்,காவல்துறையால் தாக்கப்பட்டனர். 90% புலம் பெயர்ந்த தொழிலார்களுக்கு ஊதியம் கிடைப்பெறவில்லை. சிறு வணிகங்களின் உரிமையாளர்கள், தெருவோர விற்பனையாளர்கள் மற்றும் தினசரி கூலித் தொழிலாளர்கள் வாழ்க்கையும் முற்றிலுமாக சிதைந்துள்ளது.

நோயால் தாக்கப்பட்டவர்களின் வீடுகள் ‘கொரோனா’ என குறிக்கப்பட்டு மூடப்பட்டன. குடும்பங்கள் சிறை வைக்கப்பட்டன. இச்செயல்கள் இந்நோய் மேல் இருக்கும் களங்கத்தை இன்னும் அதிகமாக்கியது. களங்கம், மருத்துவ கட்டணம் ஆகியவற்றிக்கு பயந்து பெரும்பாலானோர் அறிகுறிகளை அனுபவித்தபோதும் மருத்துவ சோதனை பெறாமல் இருந்தனர். இது கொரோனா நோய் பரவுதலை இன்னும் தீவிரமாக்கியது.
வேலை இழந்த 140 மில்லியனுக்கும் அதிகமானவர்களில் பலருக்கு வேலைக்கு திரும்புவது ஒரு கனவு மட்டுமே. கிராமப்புற வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கையை இனிமேல் மேம்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையின்றி அவதிப்படுகின்றனர். பல தசாப்தங்களாக, புதிய தாராளமய சீர்திருத்தம், விவசாயத்தை சிதைத்துவிட்டது. இதன் விளைவாக, கோவிட் -19 ஐ விட அதிகமான மக்களைக் கொல்லும் திறன் கொண்ட ஒரு தொற்றுநோயாக பட்டினி மாறி வருகிறது. இந்த ஆண்டுக்கான சரியான புள்ளிவிவரங்கள் இல்லை என்றாலும், பசியால் ஏற்படும் மரணங்கள் பரவலாகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு இந்தியா அதிகமான தற்கொலை விகிதத்தை பதிவு செய்துள்ளது. குறிப்பாக 100,000 க்கும் அதிகமானோர் தங்களைக் கொன்றுள்ளனர் -குறிப்பாக கிராமப்புறங்களில். இந்த ஆண்டு இது தொழிலாளர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். மன அழுத்தம் தொடர்பான மரணங்கள், மது அருந்துதல் உள்ளிட்டவையும் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறு மோசமடைந்து வரும் நிலைமைகள் ஏற்கனவே இருக்கும் பிளவுகளை, குறிப்பாக பாலினம் மற்றும் சாதியத்தை, மேலும் வலுப்படுத்தியுள்ளது. வாழ்க்கைத் தரத்தின் சீரழிவின் சுமைகளைத் தாங்கும் பெண்கள், அவர்கள் பெற்றிருக்கக்கூடிய எந்தவொரு பொருளாதார சுதந்திரத்தையும் இழந்து மேலும் நிலப்பிரபுத்துவ குடும்ப உறவுகள் தங்கள் வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோவிட் -19 மேலான களங்கம் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் வன்முறையை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. மிகவும் ஒடுக்கப்பட்ட தலித்துகள் மற்றும் ஆதிதிவாசிகளுக்கு எதிரான தாக்குதல்கள் 72% அதிகரித்துள்ளன என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவிட் -19 நிவாரணத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% (266 பில்லியன் டாலர்) செலவிடுவதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் போலி பிரச்சாரம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை, 30 மில்லியன். முதியவர்களுக்கு £ 10 – கிராமப்புறங்களில் உள்ள பெண்களுக்கு £ 15 – மற்றும் சிலருக்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்கான தொகை என ஏற்கனவே செலவிடப்பட்ட 22.6 பில்லியன் டாலர்களை உள்ளடக்கியதே இது. இத்தொகையின் சிறிய அளவு காரணமாக இது கிடைக்கப்பெற்றோரின் வாழ்வாதரத்தில் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எவ்வாறாயினும், இப்புதிய தொகை ஏழை எளியோரின் வாழ்வை மேம்படுத்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை, மாறாக பெரிய மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு பிணை எடுப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.

மோடி அரசின் கோர ஆட்சி:

இதற்கிடையில், மோடி நேரத்தை வீணாக்காமல் கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பிற ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலைத் தொடங்கினார். புதிய தொழில்துறை விதிகளின் படி, சிறு நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதிலோ அல்லது அவர்களுக்கு வழங்கும் நிபந்தனைகளிலோ எந்தவொரு வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதில்லை. மேலும் தொழிலாளர்கள் ஒரு தொழிற்சங்கத்தின் பகுதியாக இருக்கவோ அல்லது ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கவோ இயலாது. நாட்டில் கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர் சட்டங்களும் முதலாளிகளின் நலனுக்காக மாற்றப்பட உள்ளன.
விவசாயிகள் மற்றும் வேளாண்மை மீதான கொடூர தாக்குதல்களில் ஒன்று அக்டோபர் மாதம் பாராளுமன்றம் நிறைவேற்றிய விவசாய மசோதா. இந்த மசோதா விவசாயிகளிடம் பதுக்கலுக்கு எதிரான பாதுகாப்பையும், விலை பாதுகாப்பையும் நீக்கியது. இது பெரிய உணவு நிறுவனங்கள், பல தேசிய மற்றும் பல்பொருள் அங்காடிகள், உணவுப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன – மற்றும் அவற்றின் விலைகள் நிர்ணயிக்கப்படுதல் -என்பதை தீர்மானிப்பதில் நேரடியாக ஈடுபட அனுமதிக்கும். இந்த மசோதாக்கள் நிலங்களை வாங்குவதில் எந்தவொரு மாநில தலையீட்டையும், தொழில்களை அமைப்பதற்கு முன் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கத் தேவையான தளர்வான விதிமுறைகளையும் நீக்கியது. இதன் விளைவாக, விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இன்றி இந்தியாவின் இயற்கை வளங்களை முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு மோடி ஆட்சி எளிதாக்கியுள்ளது. இதனால் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் கோபத்திற்கு உள்ளாகி நாடு தழுவிய போராட்டங்களும் வலுவடைந்துள்ளது. இந்த மசோதாக்கள் “anti-farmer” என்று கூறி, மோடி அரசாங்கத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் அமைச்சர் கூட ராஜினாமா செய்தார்.

மேலும், ரயில்வே, பாதுகாப்புத் துறை, வங்கித் துறை போன்றவற்றின் சில பகுதிகளை தனியார்மயமாக்குவது இப்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில், வெளிநாட்டு நேரடி முதலீட்டு (foreign direct investment (FDI)) கொள்கையும் மாற்றப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பல துறைகளின் நேரடி கட்டுப்பாட்டை வைத்திருக்க அனுமதித்தது. கொரோனாவுக்கு முன் இக்கொள்கைகளை இயற்றுவது மோடி அரசுக்கு சாத்தியமற்று இருந்தது.
இந்த புதிய தாராளவாத தாக்குதல்கள் இருந்தபோதிலும், மோடி ஆட்சியின் கணிப்புகளான 6% க்கும் அதிகமான வளர்ச்சி எதுவும் நடைபெறவில்லை. மேலும் சீன மாதிரியான “Assemble in India for the world” உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக வேலையின்மை ஒரு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. நாட்டின் உற்பத்தியின் வளர்ச்சி, இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. மாருதி முதல் டாடா மோட்டார்ஸ் வரையிலான முக்கிய வாகன உற்பத்தியாளர்கள் பலர் தொழிற்சாலைகளை மூடிவிட்டனர். சாம்சங், எல்ஜி மற்றும் பல்வேறு தொழில்நுட்பத் தொழில்களும் மூடல்களை அங்கீகரிக்கத்துள்ளது.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான துண்டிப்பிலிருந்து பயனடைவதற்கான மோடி அரசாங்கத்தின் நம்பிக்கைகள் நிறைவேறவில்லை. சீனாவுக்கு பதிலாக தன்னை முன்னுறுத்தி இயங்குவதற்கான உள்கட்டமைப்பு அல்லது உற்பத்தித் தளம் இந்தியாவுக்கு இல்லை. பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கான திறனிலும், விநியோகச் சங்கிலிகளை வளர்ப்பதிலும் இந்தியா சீன அரசுடன் போட்டி போட முடியாது. இந்தியாவின் கட்டுமானமும் உற்பத்தியும் கணிசமாக சுருங்கிவிட்டன. 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 23.9% சுருங்கியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் அதற்கு முன்பே மந்தநிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்ததால் இந்த வரலாற்று சுருக்கம் கோவிட் -19 னால் மட்டுமல்ல.

மோடி ஆட்சியில் இந்து பேரினவாதம்:

பிரதமர் நரேந்திர மோடியும் பாரதீய ஜனதாவில் அவரைப் பின்பற்றுபவர்களும் அதிகாரத்தை நிலைநிறுத்த இந்து பேரினவாதத்தையும் தேசபக்தியையும் தூண்டிவிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். Article 370 மூலம் காஷ்மீரிகளின் தேசிய உரிமைகள் மீதான தாக்குதல்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மூலம் 195 மில்லியன் முஸ்லிம் மக்களின் உரிமைகளைத் தாக்குவது என அனைத்தும் மோடி அரசாங்கத்திற்கு இந்து தேசியவாத ஆதரவை பலப்படுத்தப் பயன்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ் (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் – தேசிய தன்னார்வ அமைப்பு) மற்றும் மோடி மற்றும் பாஜகவுடன் தொடர்புடைய பாசிச மையம், மத சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதலைத் தொடர்கின்றன. இந்த ஆண்டு ஆகஸ்டில் பாபர் மசூதி இருந்த இடத்தின் மேல் ராமர் கோவில் கட்டுவதற்கான அடித்தளத்தை அமைக்கும் விழாவில் மோடி கலந்து கொண்டார். இந்த இடத்தை தங்கள் புனித இடமாக பார்க்கும் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இது ஒரு நேரடி ஆத்திரமூட்டலாக இருந்தது. மோடியின் மோசமான உதவியாளரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா குடிமக்களின் தேசிய பதிவு (என்.ஆர்.சி) செயல்முறை முடிந்ததும் மாநிலமற்றவர்களாக மாறக்கூடிய மில்லியன் கணக்கான முஸ்லிம்களை வைத்திருக்க பெரிய முகாம்களைக் கட்டும் திட்டத்தைக் கொண்டுள்ளார்.
ஆர்எஸ்எஸ் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது – எல்லாரும் ஆண்கள். மேலும் பத்து மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தொழிலாளர் சங்கமான பாரதிய மஸ்டூர் சங்கத்தையும் (பி.எம்.எஸ்) கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது – இது நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்கமாகும். எட்டு மில்லியன் விவசாயிகள் கொண்ட சங்கத்துடனும் இணைப்பில் உள்ளது. பிரதமர் மோடி உட்பட அரசு நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் பல நபர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறார்கள். அதன் சித்தாந்தத்தின் அடிப்படை 1930 களில் வளர்ந்த பாசிசத்தால் ஈர்க்கப்பட்டு, இந்து தேசியவாதத்தினை மையமாகக் கொண்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அவர்களின் உண்மையான நோக்கங்களையும் யோசனைகளையும் தம்மை பின்தொடர்பவர்களிடமிருந்து மறைக்கிறது. இந்துக்களின் நல்வாழ்வைக் காக்கும் அமைப்பு என தவறான வாக்குறுதியின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை அணிதிரட்ட அவர்கள் முயன்றாலும், பெரும்பான்மையான இந்து மக்களின் நலன் பற்றிய கொள்கை அவர்களிடம் இல்லை.

ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்ப்பதாகத் தோன்ற வேண்டிய எதிர்க்கட்சி, முதலாளித்துவ சார்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் , உண்மையில், ஒருபோதும் இந்து தீவிரவாதத்தை எதிர்க்க முடியவில்லை. உண்மையில், பல காங்கிரஸ் கட்சித் தலைவர்களே தாங்கள் உண்மையான இந்து மதத்தின் கட்சி என்று கூறி இந்து வாக்குகளைப் பெற முயற்சிக்கின்றனர். மோடியை எதிர்க்கக்கூடிய எந்தவிதமான வலுவான செயல் திட்டங்கள் இல்லாமையே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம். காங்கிரஸ் கட்சியின் இவ்வீழ்ச்சியே மோடி தன்னை “வலிமையானவர்” என்று தக்க வைத்துக் கொள்ள மற்றொரு காரணம். சுதந்திரத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆட்சி செய்தது, ஆனால் இனி அது ஒரு ‘தேசிய’ கட்சி அல்ல. நாடாளுமன்றத்தின் பிரதான சபையான மக்களவையில் 543 இடங்களில் 51 இடங்கள் மட்டுமே அவரகள் வசம் உள்ளன. இந்தியாவில் 29 மாநிலங்களில் ஆறில் அவர்கள் ஆளும் கட்சியாக இருந்தாலும், இரண்டு மாநிலங்களில் (ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப்) மட்டுமே அவர்கள் வலுவான நிலையில் உள்ளனர். அவர்களின் கடந்தகால ஊழல் வரலாறு – மற்றும் பொருளாதாரத்தை ‘தாராளமயமாக்குதல்’ என்ற பெயரில் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் எதிர்கொண்ட தாக்குதல்கள் -ஆகியன இன்னும் அவர்களை வேட்டையாடுகின்றன.

இடது சாரிகள் பெரும் தோல்வி:

கடந்த பொதுத் தேர்தலில், மோடி தலைமையிலான பாஜக மேலும் 21 இடங்களைப் பெற்றது, 6% வாக்குகள் அதிகரிப்புடன் (37.3% வாக்குகள் பாஜக வென்றது). இருப்பினும், எதிர்க்கட்சிகளின் பலவீனம் தான் இந்த கட்சியை ஒரு வலுவான சக்தியாக மாற்றியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPI (M)) ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் சொந்த பலத்தை வளர்ப்பதற்கு பதிலாக, எப்போதும் காங்கிரஸ் கட்சியை வாலைப்பிடித்த வண்ணம் உள்ளனர். காங்கிரஸின் தலைமையின் கீழ் ஒரு ‘தேசிய’ ஐக்கிய எதிர்ப்பை அணிதிரட்டுவது அவர்களின் மூலோபாயமாகவே இருந்தது. ஆனால் இக்கட்சிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வெளியேறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் நாட்டின் சிறிய கம்யூனிச அமைப்புகள், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியவற்றை ஒரு பாசிச கட்சியாகவும், மோடியை அதன் பாசிச தலைவராகவும் வகைப்படுத்துகின்றன. இந்த தவறான பகுப்பாய்விலிருந்து அவர்கள் தவறான முடிவுகளை பெறுகிறார்கள், இது அவர்களை தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படும் தலைமைத்துவத்தை வழங்க முடியா நிலைக்கு தள்ளுகிறது.

சிபிஐ (எம்) இன் தற்போதைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரசுடன் முழு ஒத்துழைப்புக்காக வாதிடுகிறார், இது “பாசிசத்தை தோற்கடிப்பதாக” என கூறப்படுகிறது. யெச்சூரியின் வாதம் வெளிப்படையான சந்தர்ப்பவாதத்திலிருந்து வெளிப்படுகிறது – ஒரு மார்க்சிய பகுப்பாய்வோடு எந்த தொடர்பும் இல்லை. உண்மையில், கம்யூனிஸ்டுகள், பிஜேபி அரசிடம் இருந்து தாங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு எதிர்ப்பையும் மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் உட்பட ‘பாசிசம்’என்று பெயரிடுகிறார்கள். மேற்கு வங்காளத்தில் (பல ஆண்டுகளாக கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்த ஒரு மாநிலம்) திரிணாமுல் காங்கிரஸ் பலப்படுத்தப்படுவதற்கான காரணம், சிபிஐ (எம்) இன் தவறான அரசியல் மற்றும் மூலோபாயமே. குறிப்பாக 2007 ஆம் ஆண்டில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட நந்திகிராம் அதற்குக் கரணம். அவர்களின் கட்சி தொழிலாள வர்க்கம் “ஏகாதிபத்தியத்திற்கும் அதன் சுரண்டல் ஒழுங்கிற்கும் எதிராக இடைவிடாத போராட்டத்தை” நடத்த வேண்டும் என்றும், “உலகெங்கிலும் உள்ள இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கான சக்திகளின் ஒற்றுமை ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், ஆளும் வர்க்கங்களை தோற்கடிக்கவும் வேண்டும்” எனக் கோருகின்றனர். ஆனால் அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு சில சமயங்களில் உள்ளூர் முதலாளிகளின் சார்பு நிலையை எடுக்கும் வாய்ப்பாக இருக்கிறது. உலகத் தொழிலாளர்களிடையே சர்வதேச ஒற்றுமையின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு கடுமையான எதிர்ப்பை உருவாக்குவது அவர்களின் வரலாறாக இருந்ததில்லை. கட்சித் தலைமை ஒருபோதும் புதிய தாராளவாத தாக்குதலுக்கு எதிராக எந்தவொரு தீவிர எதிர்ப்பையும் ஏற்பாடு செய்யவில்லை. அவர்கள் முதலாளித்துவ கூட்டாளிகளுடன் கூட்டு சேர்ந்து, அவர்களிடம் இருந்த எல்லா பலத்தையும் இழந்தனர். மேற்கு வங்கத்தில் கடந்த தேர்தலில், சிபிஐ (எம்) மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அவர்களின் கூட்டாளியான காங்கிரஸ் அதிக இடங்களை வென்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஸ்டாலினிச கட்சிகள் முதலாளிகளுடன் ஒத்துழைப்பது மற்றும் முதலாளித்துவக் கட்சி இவர்கள் மூலம் ஆதாயங்களைப் பெற அனுமதிப்பது போன்ற தவறுகளைச் செய்வது இது முதல் முறையல்ல.

இந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களின் ஆதரவு சந்தேகத்திற்கு இடமின்றி குறைந்து வருகிறது, கடந்த பொதுத் தேர்தலில் சிபிஐ (எம்) மூன்று இடங்களை வென்றது. அவர்கள் கேரளாவில் ஒரு இடத்தையும் தமிழகத்தில் இரண்டு இடங்களையும் பெற்று இருந்தனர். ஆனால் இது அவர்களின் சொந்த பலத்திலிருந்து கிடைக்கப்பெறவில்லை. மாறாக கூட்டணி மூலம் கிடைத்த வெற்றியே ஆகும்.
தங்களது ‘உறுப்பினர்கள் ’ மற்றும் பதவிகளின் மேல் உள்ள கட்டுப்பாட்டை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், இந்த கட்சிகள் தொழிற்சங்கங்களுக்குள் அல்லது தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பிற பொது அமைப்புகளில் கூட ‘fighting fascism ’ என்ற கொள்கையை முன்வைப்பதில்லை. இந்த பிரச்சாரம் வெறுமனே பலவீனமான காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்க சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தப்படுகிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தாங்கள் முன்வைக்கும் அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படையில் பெருமளவில் வித்தியாசம் இல்லை. தலைமைகளுக்கு நிறைய பொதுவான விஷயங்கள் இருக்கலாம் மற்றும் சாத்தியமான ‘இணைப்பு’ பற்றி பேசலாம். ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தேர்தல் உடன்படிக்கைக்கு மட்டுப்படுத்தப்பட்டே இருக்கிறது. இதனால் பெருமளவில் உறுப்பினர்கள் வேறு திசையில் இழுக்கப்படுவார். மோடி அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராகவும் ஒரு தீவிரமான போராட்டத்தை எதிர்பார்க்கும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு, வளர்ந்து வரும் போராட்டங்களில் இவர்களின் வால் பிடிக்கும் கொள்கைகள் போதுமானதாக இல்லை.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான சொல்லாட்சி இருந்தபோதிலும், சிபிஐ (எம்எல்) உள்ளிட்ட பல்வேறு மாவோயிச சக்திகளும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தெளிவான மூலோபாயத்தை வழங்கத் தவறிவிட்டன. அவர்களின் வாதங்களும் செயல்களும் முரண்பாடுகள் நிறைந்தவை. அவர்கள் ‘பாசிசத்திற்கு எதிரான போராட்டம்’ என்ற சொல்லாட்சியை உறுப்பினர்களிடையே ஒரு தீவிர நிலைக்கு எடுத்துச் செல்கிறார்கள், ‘ஜோ ஹிட்லர் கி சால் சலேகா, வோ ஹிட்லர் கி ம ut ட் மரேகா’ (ஹிட்லரின் பாதையில் நடப்பவருக்கு ஹிட்லரின் பாதையிலேயே மரணம்) என்ற தீவிர கோசத்தை வைக்கிறார்கள். பாசிசத்தின் தோல்வியை “வான்கார்ட் பிரிவின் மைய பணி (central task of the vanguard section)” என்று அடையாளம் காணும் அவர்களின் அறிக்கை, சிபிஐ (எம்), காங்கிரஸ் மற்றும் அவர்களின் கூட்டணியின் குற்றங்களை பட்டியலிடுகிறது. “இந்த நிலைமையை எதிர்க்க ஒரு மாற்று புரட்சிகர இடது சக்தி அவசியம்” என்று அறிக்கை சரியாகக் கூறுகிறது. ஆனால் அதே நேரத்தில் தலைமை, முதலாளித்துவ சார்பு மற்றும் கம்யூனிச கட்சிகள் என்று அழைக்கப்படுபவர்களுடன் தேர்தல் கூட்டணிகளுக்குச் செல்கிறது. அசாமில், காங்கிரஸ் மற்றும் சிபிஐ உடன் கூட்டணியை அமைப்பதன் மூலம் வரும் தேர்தலில் பாசிசத்தை தோற்கடிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

இந்தியாவில் இடதுசாரிகள், தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளை மேம்படுத்துவதில் அல்லது முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு சவாலை வழங்குவதில் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் பலவீனமாக உள்ளது. இது முக்கியமாக அவர்களின் அரசியல் பலவீனமே ஆகும். இந்த அமைப்புகள் எதிர்கொள்ளும் தலைமை பிரச்சினைகள் உலகெங்கிலும் நாம் காணும் தலைமை நெருக்கடியிலிருந்து விலக்கில்லை. அதாவது தற்போதைய நிலைமையை ஆராய்ந்து, முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு போராடும் மூலோபாயத்தை கொண்டு வர இயலாமையின் அடிப்படையே. இந்த சக்திகள் இந்தியாவில் முதலாளித்துவத்தின் தன்மையை எவ்வாறு பகுப்பாய்வு செய்தன என்பதிலிருந்து, சாதி ஒடுக்குமுறை தொடர்பான அவர்களின் பகுப்பாய்வுகள் மற்றும் நிலைகள் மற்றும் தேசிய கேள்வி வரை அனைத்தும் தொழிலாள வர்க்கத்திற்கு முற்றிலும் தவறானவை அல்லது பயனற்றவையாகவே தெரிகிறது. ஒருபுறம், முந்தைய அரசாங்கங்களின் “ஊழல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான கோபமே ” பாஜகவுக்கு ஒரு ஆதரவு தளத்தைப் பெற்றது என்று அவர்கள் கூறும் அதே சமயம், -அவர்கள் அந்த பகுப்பாய்வில் இருந்து தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு வலுவான நிலைக்கு வர வேண்டிய முடிவுகளை எடுக்கவில்லை. பாஜகவின் “கார்ப்பரேட் இந்து பாசிசம்” என்பது பிராமணிய சித்தாந்தத்தின் பரவலின் விளைவாக “தீவிர தேசியவாத தளத்தை” உருவாக்குவதாக வாதிடுவதன் மூலம் சரியான திட்டமிடல் நோக்கி நகர்வதைக் கைவிடுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் பாசிச மையத்தின் அச்சுறுத்தல் மற்றும் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான மோயின் தாக்குதல் மிகவும் உண்மையானது. மோடி அரசாங்கத்தின் சர்வாதிகார தன்மை, ஆயிரக்கணக்கான செயற்பாட்டாலர்களை சிறையில் அடைத்தல், அடிப்படை ஜனநாயக உரிமைகளை கூட தாக்குவது ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். நன்கு அறியப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூட சமீபத்தில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேட்டையைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், பல நாடுகளில் அரசின் சர்வாதிகார தன்மை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலக பொருளாதார நெருக்கடியால் துரிதப்படுத்தப்பட்ட பல தசாப்த கால புதிய தாராளமயத்தின் விளைவாக, வாழ்க்கை நிலைமைகள் சிதைந்து போவதும், இப்போது பல்லாயிரக்கணக்கானோர் எதிர்கொள்ளும் நிச்சயமற்ற எதிர்காலமும். முதலாளித்துவத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்ய, தீர்வு காண எந்த முதலாளித்துவ அரசாங்கங்களும் முன்வரப் போவதில்லை. முதலாளித்துவத்தின் பலவீனமான நிலைப்பாடு, முதலாளித்துவத்தை நிலைநிறுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையின்மையை வளர்த்துள்ளது. தீவிரமான எதிர்ப்பு எழுவதற்கு இதுவும் காரணம். அதே சமயம் ஜனரஞ்சக முழக்கங்களைப் பயன்படுத்தி சில காலத்திற்கு அதிகாரத்தைப் பெறவும் பராமரிக்கவும் வலதுசாரிய சர்வாதிகார சக்திகளுக்கு ஏதுவாக உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் ஒப்பீட்டளவில் பெரிய பாசிச மையத்தைக் கொண்டுள்ளது என்பது உண்மைதான் என்றாலும், அவற்றையும் பாஜகவின் ஆதரவு தளத்தையும் அல்லது பொதுவாக இந்திய அரசையும் பாசிசமாகக் குறிப்பிடுவது தவறு. அந்த அடிப்படையில் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களுடன் இணையவில்லை. மோசமான வாழ்வாதார நிலைமைகளின் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்துள்ளனர். இதைப் புரிந்துகொள்வது போராடுவதற்கான திட்டமிடல்களை வகுப்பதில் முக்கிய பங்கு வகிக்கவேண்டும்.

தொலைதூர முன்னோக்கு மற்றும் வலுவான தலைமையுடன் கூடிய வெகுஜன தொழிலாளர் அமைப்புகள் இல்லாத நிலையில், கோபத்தை வெளிப்படுத்தும் அனைத்து வகையான மாறுபாடுகளும் நடக்கக்கூடும் – தீவிர வலதுசாரிகளுக்கான ஆதரவு உட்பட- என்று C.W.I அமைப்பு பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த எதிர் புரட்சிகர சக்திகளின் (counter-revolutionary forces) வளர்ச்சி பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியில் வேரூன்றியுள்ளது. பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளின் முன்னேற்றத்திற்காக போராடுவதற்கான ஒரு திட்டத்தையும் மூலோபாயத்தையும் முன்வைக்காமல், சோசலிசத் திட்டத்தின் அடிப்படையில் சமூகத்தை ஒழுங்கமைப்பதில் ஒரு அடிப்படை மாற்றத்தின் அவசியத்துடன் அதை இணைக்காமல், இந்த சக்திகளை நாம் முழுமையாக எதிர்த்துப் போராட முடியாது. தேர்தல் ஆதாயத்திற்காக இந்த நிலைமைகளை உருவாக்கும் சக்திகளின் மீது சாய்வது இடதுசாரிகளை வலுப்படுத்துவதையோ அல்லது தீவிர வலதுசாரிகளின் தோல்வியையோ ஏற்படுத்தாது. அத்தகைய இடைக்கால வேலைத்திட்டத்தை உருவாக்குவது, ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்கான உடனடி பணியை நிவர்த்தி செய்வதற்கும் எதிர்காலத்தில் இந்த வெற்றிகளைப் பெறுவதற்கும், முக்கியமாகும். மோடியின் தேர்தல் தோல்வி சாதகமான நிலைமைகளை வழங்கக்கூடும். ஆனால் அதன் இடத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது மோடியை ஆட்சியில் அமர்த்திய சமூக-பொருளாதார நிலைமைகளுக்கு தீர்வு காணாது.
உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்கான ஒரு போராட்ட சக்தியை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும், இடதுசாரி தலைவர்கள் தேர்தல் உடன்படிக்கையின் கீழ் ஒன்றிணைவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மாறாக, விவசாயிகள், ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகளுக்கு வழிவகுக்கும் ஓர் தலைமை ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் பலம் மூலம் திரட்டப்பட வேண்டும். மேலும் தொழிற்சங்கங்கள், பிற தொழிலாளர் அமைப்புகள் மற்றும் இடதுசாரிகளின் கட்டுப்பாடு/செல்வாக்கு உள்ள சமூக அமைப்புகளில் தீர்க்கமான பணிகள் தொடங்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள, இந்த மாதத்திற்கான பொது வேலைநிறுத்தம், போராட்டத்தை விரிவாக்குவதற்கான நீண்டகால மூலோபாயத்துடன் தொழிலாளர்கள் மத்தியில் கலந்துரையாடலையும் அணிதிரட்டலையும் தொடங்குவதற்கான ஒரு வழியாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற பொது வேலைநிறுத்தங்கள், மகத்தானவை. இந்த வேலைநிறுத்தங்கள் சில கொள்கைகளின் அடிப்படையில் அரசாங்கத்தை பின்னுக்குத் தள்ள உதவியிருந்தாலும், அவை தொழிலாள வர்க்கத்தின் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. வரவிருக்கும் பொது வேலைநிறுத்தம் மற்றும் அதன்பின் செயல்படுத்த வேண்டிய மூலோபாயம் மூலம், மோடி ஆட்சி மற்றும் அதன் தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளை பின்னுக்குத் தள்ளுவது மட்டுமல்லாமல், ஒழுங்காக ஒழுங்கமைத்தால் அரசாங்கத்தை வீழ்த்துவதில் கூட ஒரு பங்கையும் வகிக்க முடியும். தொழிற்சங்கங்கள், ஊதியங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான நிபந்தனைகள் மட்டுமின்றி, தொழிலாளர்களின் பணியிடப் பாதுகாப்பைக் கட்டுப்படுத்துதல், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக மேற்பார்வை மற்றும் பெரும்தொற்று நடவடிக்கைகள், பொது சேவைகள் மற்றும் முக்கிய தொழில்கள் ஆகியவற்றிற்கான பிரச்சாரம் மற்றும் செயல் திட்டங்களையும் தொடங்க வேண்டும்.

இந்தியாவில் போராட்டத்திற்கு பஞ்சமில்லை. CAA / NRC எதிர்ப்பு இயக்கம் தேசிய அளவில் பரவி, கோவிட் -19 நெருக்கடியின் தொடக்கத்தில் வளர்ந்து வந்தது. கொடூரமான லோக்டவுன் நிலைமைகளில் கூட, ஒடுக்கப்பட்ட சாதியினரின் கொடூரமான கொலைகளுக்கு எதிராக, காவல் துறையினருக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முன்வந்துள்ளனர். விவசாயிகளின் உரிமைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், எவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் போராடுவதற்கு ஆயத்தமாக உள்ளார்கள் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு. துரதிர்ஷ்டவசமாக, இந்த போராட்டங்களை ஒன்றிணைத்து ஒரு தீர்க்கமான எதிர்ப்பை ஒழுங்கமைக்கக்கூடிய எந்தவொரு தேசிய தளமும்/அமைப்பும் இல்லை. அத்தகைய ஒரு வெகுஜன அமைப்பை உருவாக்குவது ஒரு முக்கிய தேவை. இடதுசாரிகளில் பலர் (குறிப்பாக மாவோயிஸ்டுகள்) இப்போது தங்கள் கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளின் வரம்புகளைக் காண்கிறார்கள், மேலும் ஒரு புதிய சக்தியைக் கட்டியெழுப்ப அவர்களுடன் முறித்துக் கொள்ள வேண்டிய அவசியம் வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். ஆனால் தெளிவின்மை மற்றும் அத்தகைய சக்திகளைக் கட்டியெழுப்புவதற்கான ஜனநாயக விரோத ஸ்டாலினிச அணுகுமுறை ஆகியவை கடக்கப்பட வேண்டிய தடைகளாக இருக்கின்றன. தொழிற்சங்கங்கள், சோசலிஸ்டுகள் மற்றும் கம்யூனிச அமைப்புகள் மற்றும் பிற போராடும் சக்திகள் ஒரு ஜனநாயக போராடும் மேடையில் ஒன்று சேர வேண்டும். நிறுவன சுதந்திரத்தை பேணுகையில், கூட்டாட்சி உரிமைகளுடன் ஜனநாயக ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட இத்தகைய வெகுஜன தளம் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவுகளையும் அணிதிரட்டுவதில் உண்மையான அக்கறை கொண்டிருக்க வேண்டும். ஒரு அரசியல் வேலைத்திட்டத்தின் வளர்ச்சியே அதற்கு முக்கியமானது. உதாரணமாக, தேசியப் பிரச்சினை -மற்றும் சாதியப் பிரச்சினை குறித்து தெளிவு இல்லாமல், அத்தகைய நாடு தழுவிய சக்தியை இந்தியாவில் வெற்றிகரமாக உருவாக்க முடியாது. இந்தியா இன்னும் தேசிய இனங்களின் சிறைச்சாலையாகவே உள்ளது. ஒரு மொழியையும் கலாச்சாரத்தையும் கொண்ட ஒரு தேசம் – ஒரு இந்து தேசம் – என மோடி அரசு முன்வைக்கும் முயற்சிகள் பல மாநிலங்களில் தேசிய அபிலாஷை தீயை மீண்டும் பற்ற வைக்கும். இந்த நெருக்கடி முதிர்ச்சியடையும் பட்சத்தில் எதிர்காலத்தில் இந்தியா எனும் துணைக் கண்டம் – பல்வேறு கலாச்சார தனித்துவங்களைக் கொண்ட மக்கள் – கிட்டத்தட்ட 20 000 மொழிகள் பயன்பாட்டில் உள்ள நாடு – உடைபடுவதற்கான சாத்தியங்கள் உண்டாகும்.

சாதி மற்றும் வகுப்பு:

கடந்த காலங்களில் இடதுசாரிகளின் (குறிப்பாக ஸ்டாலினிச அமைப்புகளின்) தவறுகள், அடையாள அரசியல் அமைப்புகளின் தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம். சில கம்யூனிஸ்டுகள் அடையாள அரசியலை ‘விமர்சிக்கிறார்கள்’ என்றாலும், உண்மையில் அவர்கள் ஒடுக்கப்பட்ட பிரிவினரிடையே தங்கள் நற்பெயரை மீண்டும் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் எப்போதுமே குட்டி-முதலாளித்துவ தலைமையின் வாலை பிடித்தவண்ணம் உள்ளனர். சிபிஐ (எம்) ஏற்பாடு செய்த பல்வேறு ‘தலித் தளங்கள்’ சிவப்பு மற்றும் நீல நிற ஒற்றுமைக்காக வாதிடுகின்றன. ஆனால் இந்த முயற்சி சாதியைப் பற்றிய ஒரு மார்க்சிய பகுப்பாய்வு மற்றும் சாதி ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வெகுஜன ஐக்கிய போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டத்திற்கு மாற்றாக இல்லை. இது தேர்தல் ஆதாயங்களுக்கான ஆதரவைப் பெற முற்படுவதாகக் கருதப்படுகிறது. பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற போதிலும் சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைக்கு எதிராக எந்தவொரு தீவிரமான போராட்டத்தையும் ஒழுங்கமைக்க இதுவரை தவறிவிட்டன. புதிய சோசலிச மாற்று, (இந்தியாவில் சி.டபிள்யூ.ஐ பிரிவு), சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை தொடர்பாக தொழிற்சங்கங்களில் ஒரு சொட்டு சகிப்புத்தன்மையும் இருக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்கிறது. சிபிஐ (எம்), தலித் உரிமைகளுக்காகப் போராடுவதாக நடித்துக்கொண்டிருக்கையில், இதுவரை அவர்கள் வழிநடத்தும் தொழிற்சங்கங்களில் இதுபோன்ற கோரிக்கைகளை ஆதரிக்கவில்லை. தொழிலாளர்கள், குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்கள், சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், பல சிபிஐ (எம்) தொழிற்சங்கத் தலைவர்கள் எதிர் திசையில் பயணிக்கிறார்கள். தொழிற்சங்கங்களில் தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இவர்கள் இந்த பிரச்சினையை எடுக்க விரும்பவில்லை.
அரசியல் புரிதல் இல்லாத தலைமைகளே, சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதற்கான ஒரு திட்டத்தையும் மூலோபாயத்தையும் உருவாக்க முடியாமைக்கு முக்கிய காரணம். இத்தெளிவின்மையால் தான் அடையாள அரசியலின் பின்னால் வால் பிடித்து நிற்கின்றனர். தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தில், “அம்பேத்கர் போதாது. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக போராட மார்க்ஸ் தேவை” என்ற கூற்றுக்கு எதிராக காவல்துறையிடம் புகார் அளிக்கும் வரை சென்றுள்ளனர். இதேபோல் அவர்கள் தேசிய கேள்வி தொடர்பாக பல்வேறு நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். ‘லெனினிஸ்ட்’ என்று கூறிக்கொண்டு, சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் அதே வேளையில், காஷ்மீரைப் போலவே, தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான கோரிக்கைகளை அது வலுவாக இருக்கும் இடத்தில் எதிர்த்தது மட்டுமல்லாமல், அவர்கள் தேசிய உரிமைகளுக்கு எதிராக செயல்படும் சக்திகளுடன் ஒத்துழைத்துள்ளனர். இதேபோல், தொழிலாள வர்க்கத்தின் தீவிரமான சர்வதேச அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் ஸ்டாலினிச கடந்த காலங்களில் சிக்கியுள்ளனர். தெற்காசியாவைப் பொறுத்தவரையில் கூட, அவர்கள் தொழிலாளர் எதிர்ப்பு – ஒடுக்கப்பட்ட பிரிவு நிலைகள் மற்றும் கொள்கைகளை ஏற்றுக்கொண்டனர். சிபிஐ (எம்) ஒருபோதும் இலங்கையில் நடந்த இனப்படுகொலை போரை தீவிரமாக எதிர்க்கவில்லை. அல்லது இலங்கையில் தமிழர்களின் தேசிய உரிமைகளை ஆதரிக்கவில்லை.சிபிஐ (எம்எல்) இன் ஒரு சர்வதேச அமைப்பைக் கட்டியெழுப்பும் யோசனையும் இது போன்றதே; அவர்கள் கூட்டணிக்கு தயாராக இருப்பவர்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. ஐக்கிய போராட்டங்களை அல்லது வெகுஜன தளத்தை உருவாக்குவது அரசியலின் தெளிவு இல்லாமல் செய்ய முடியாது. ஒரு தொலைதூர முன்னோக்கு மற்றும் கொள்கை ரீதியான வேலைத்திட்டம் ஆகியவை உண்மையான ஒற்றுமையைக் கொண்டுவரக்கூடிய முக்கிய கருவிகள். அதாவது அனைத்து தொழிலாளர்கள், விவசாயிகள், பிற ஒடுக்கப்பட்ட பிரிவுகள் மற்றும் இளைஞர்களின் ஒற்றுமை. இந்த வளர்ச்சிக்கு தடையாக செயல்படும் தலைமைத்துவங்கள் தொழிற்சங்கங்களிலும் இடதுசாரி அமைப்புகளிலும் எதிர்க்கப்பட வேண்டும்.

தற்போதைய மோடி அரசாங்கத்திற்கும் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்பிற்கும் கடுமையான எதிர்ப்பை உருவாக்க விரும்புவோர் அனைவரும் போராடும் சோசலிச வேலைத்திட்டத்தை நோக்கி செல்ல வேண்டும். இது தொழிலாள வர்க்கத்தால் அதிகாரத்தை எடுத்துக்கொள்வதன் மூலம் சாத்தியமாகும்.இந்தியாவில் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட அனைத்து பிரிவுகளும் இப்போது தங்கள் வாழ்நாளில் கண்டிராத நெருக்கடியை எதிர்கொள்கின்றன. நெருக்கடி ஆழமடைகையில், மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்து போக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், அதே நேரத்தில் முதலாளித்துவம் சமூகத்தில் நிலவும் அனைத்து வகையான பிளவுகளையும் இரையாகி, அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியைத் தக்க வைத்துக் கொள்ளும். கொள்கை மற்றும் போராட்டத்திற்கான தெளிவான திட்டம் – மற்றும் அதன் அடிப்படையில் வெகுஜன தொழிலாள வர்க்க அமைப்புகளை உருவாக்குதல் ஆகியவை இனி தாமதப்படுத்த முடியாது.