Views: 0
ஆண்டி பர்ன்ஹாம் பிரித்தானியாவின் புதிய பிரதமர்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிகப்பெரிய வெற்றியுடன் ஆட்சிக்கு வந்த கியர் ஸ்டார்மர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, முன்னாள் கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான ஆண்டி பர்ன்ஹாம்(Andy Burnham) தொழிற்கட்சியின் தலைவராகவும், அதனூடாக பிரித்தானியாவின் பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் பிரித்தானியாவுக்கு இது ஏழாவது பிரதமர். இந்த எண்ணிக்கையே பிரித்தானிய முதலாளித்துவ அரசியல் அமைப்பு எதிர்கொள்ளும் ஆழமான நெருக்கடியை வெளிப்படுத்துகிறது.
ஸ்டார்மர் தலைமையிலான அரசு 2024 பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை வென்றிருந்தாலும், அது நூற்றாண்டில் பெரும்பான்மை அரசை அமைத்த தலைவர்களில் மிகவும் குறைந்த வாக்கு சதவீதத்துடன் வெற்றி பெற்ற ஒன்றாகும். மேலும், ஜெரமி கோர்பின் தலைமையிலான தொழிற்கட்சி 2017 மற்றும் 2019 தேர்தல்களில் பெற்றிருந்த வாக்குகளைவிட ஸ்டார்மர் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், மேக்கர்ஃபீல்ட் (Makerfield இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியாகும்) இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஆண்டி பர்ன்ஹாம் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி, நைஜல் பாரேஜ் தலைமையிலான ரீஃபார்ம் UK கட்சியின் எழுச்சியை எதிர்கொள்ளக்கூடிய தலைவராக அவரை சிலர் சித்தரிக்கின்றனர்.
ஆனால் அரசியல் நிலைமை அதைவிட சிக்கலானது. பர்ன்ஹாம் பிரதமராக பொறுப்பேற்கும் முன்பே நடைபெற்ற நார்ஃபோக் காவல்துறை ஆணையர் இடைத்தேர்தலில் ரீஃபார்ம் UK வெற்றி பெற்றது. 2024இல் தொழிற்கட்சி வென்றிருந்த இடத்தில் அதன் வாக்குகள் கடுமையாக சரிந்தன. இது பர்ன்ஹாமின் தலைமையால் உடனடி அரசியல் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக கூற முடியாது என்பதைக் காட்டுகிறது.
பிரதமராக பதவியேற்ற பிறகு பர்ன்ஹாம் பல பொதுமக்கள் விரும்பக்கூடிய வாக்குறுதிகளை முன்வைத்துள்ளார். புதிய சமூக வீடுகள் கட்டுதல், குடிநீர் மற்றும் மின்சார சேவைகளில் அதிக பொதுக் கட்டுப்பாடு, தெரு வீடற்ற நிலையை ஒழித்தல், குடும்பங்களுக்கு வாழ்க்கைச் செலவு நெருக்கடியில் சிறு நிவாரணம் வழங்குதல் போன்றவை அவற்றில் அடங்கும். எரிசக்தி கட்டணங்களுக்கான VAT குறைப்பு சராசரி குடும்பத்திற்கு ஆண்டுக்கு சுமார் £45 சேமிப்பை வழங்கும் எனக் கூறப்படுகிறது.
ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை அடிப்படையாக மாற்றுமா என்பது கேள்வியாகவே உள்ளது. பணவீக்கம், உயர்ந்த வீட்டு வாடகை, குறைந்த ஊதியம், சமூக சேவைகளுக்கான நிதிக் குறைப்பு ஆகிய பிரச்சினைகள் தொடர்கின்றன.
இதிலும் முக்கியமாக, பர்ன்ஹாம் முன்னாள் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் கடைப்பிடித்திருந்த கடுமையான நிதி ஒழுங்கு விதிகளைத் தொடருவதாக அறிவித்துள்ளார். இதனால் பொதுச் செலவினங்களை அதிகரிக்கும் அவரது வாக்குறுதிகள் நடைமுறையில் எவ்வளவு சாத்தியமாகும் என்ற சந்தேகம் எழுகிறது.
அவரது அமைச்சரவையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிப்பதில்லை. உள்துறை செயலாளராக ஷபானா மக்மூத் தொடர்வதால், குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான அணுகுமுறை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று முன்பே வலியுறுத்திய ஜான் ஹீலி தற்போது நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பாதுகாப்பு செலவினங்களை உயர்த்துவதற்காக பிற பொதுச் சேவைகளில் மேலும் வெட்டுகள் நிகழ வாய்ப்பு இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.
வேலை மற்றும் ஓய்வூதியத் துறையில் மாற்றமின்றி தொடரும் அமைச்சரவை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களில் முன்வைக்கப்பட்டிருந்த சீர்திருத்தங்களும் தொடரும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்ன்ஹாமின் பொருளாதார ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வங்கி மற்றும் கருவூல அதிகாரிகள், பொதுச் செலவினக் கட்டுப்பாடு மற்றும் ஓய்வூதியச் சீர்திருத்தங்களை ஆதரித்து வந்தவர்கள். இதனால் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் முயற்சியாக இந்த நியமனங்கள் பார்க்கப்படுகின்றன.
பர்ன்ஹாம் தனது அரசை தொழிற்கட்சியின் “கடைசி வாய்ப்பு” என்று வர்ணித்துள்ளார். அதாவது, இந்த அரசு தொழிலாளர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தத் தவறினால், வலதுசாரி மக்களிய அரசியலுக்கு மேலும் இடம் உருவாகும் அபாயம் உள்ளது.
இந்த சூழலில் தொழிற்சங்கங்களின் பங்கு முக்கியமானதாக மாறுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு, பொதுச் சேவைகளுக்கான நிதி, வேலைவாய்ப்பு பாதுகாப்பு போன்ற கோரிக்கைகளுக்காக போராடி வந்தன. புதிய பிரதமர் வந்துவிட்டார் என்பதற்காக இந்தப் போராட்டங்கள் நிறுத்தப்படக் கூடாது என்று பல இடதுசாரி செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தேசிய கல்வி ஒன்றியம் (NEU) உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களில் வேலைநிறுத்த வாக்கெடுப்பை ஒத்திவைக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டபோதிலும், உறுப்பினர்களிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக போராட்டத் திட்டங்கள் தொடரப்பட்டுள்ளன. பொதுத்துறை ஊழியர்கள், உள்ளூராட்சி ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்ளும் தொழிலாளர் மக்கள் தங்களது கோரிக்கைகளை சுயாதீனமாக முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து இடதுசாரி வட்டாரங்களில் வலுப்பெற்று வருகிறது.
இதேவேளை,Reform UK கட்சிக்கு எதிராக எழுந்துள்ள நிதி தொடர்பான சர்ச்சைகள் அந்தக் கட்சியின் வளர்ச்சியை தற்காலிகமாகத் தடுக்கக்கூடும். இருப்பினும், புதிய தொழிற்கட்சி அரசும் பழைய சிக்கனக் கொள்கைகளைத் தொடருமானால், அது எதிர்காலத்தில் வலதுசாரி மக்களிய அரசியலுக்கு மேலும் வலுசேர்க்கும் அபாயம் இருப்பதாக பல அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மொத்தத்தில், ஆண்டி பர்ன்ஹாமின் பிரதமர் பதவியேற்பு பிரித்தானிய அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் பெயர் மாறுவது மட்டும் தொழிலாளர் மக்களின் வாழ்க்கையை மாற்றாது. வாழ்க்கைச் செலவு நெருக்கடி, பொதுச் சேவைகளுக்கான நிதி, ஊதிய உயர்வு, சமூக நலன், மற்றும் பொருளாதார சமத்துவம் போன்ற அடிப்படை கேள்விகளுக்கான பதில்களே அவரது அரசின் வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிக்கும். அதே நேரத்தில், தொழிற்சங்கங்களும் தொழிலாளர் இயக்கங்களும் சுயாதீனமான அழுத்தத்தைத் தொடர்ந்து உருவாக்குகிறார்களா என்பதும் பிரித்தானிய அரசியலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.