ஈரானின் இதயத் துடிப்பு 

Views: 0

ஈரானின் இதயத் துடிப்பு 

 

இரான் குறித்து உலகத்தில் நடக்கும் அரசியல் பதற்றங்களும், போர் சூழ்நிலையும் அதிகரித்த பிறகு, The Heartbeat of Iran: Real Voices of a Country and Its People என்ற புத்தகம் மீண்டும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. அமெரிக்க-இரானிய செய்தியாளர் Tara Kangarlou 2021 இல் எழுதிய இந்த நூல், அரசியல் தலைப்புகளைக் குறித்து மட்டும் அல்லாமல், சாதாரண ஈரான் மக்களின் வாழ்க்கை கதைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. இந்த புத்தகம் ஈரான் நாட்டின் சமூக, மத, கலாச்சார பல்வகைமையை காட்டும் 24க்கும் மேற்பட்ட மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்கிறது. 

The Heartbeat of Iran என்பது ஈரான் நாட்டின் அரசியல் வரலாறு பற்றி எழுதப்பட்ட ஒரு சாதாரண ஆய்வு நூல் அல்ல. மாறாக, அந்த நாட்டில் வாழும் பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்யும் ஒரு தொகுப்பு. இந்தப் புத்தகத்தின் முக்கிய நோக்கம் உலகம் முழுவதும் ஈரான் பற்றிய பொதுவான தவறான புரிதல்களை உடைத்து, அந்த நாட்டின் மக்களின் உண்மையான குரல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும்.

உலக ஊடகங்களில் ஈரான் பெரும்பாலும் அணு ஆயுத விவாதங்கள், மத அரசியல், அமெரிக்கா–ஈரான் மோதல் போன்ற விஷயங்களின் மூலம் மட்டுமே பேசப்படுகிறது. ஆனால் அந்த அரசியல் படிமங்களை தாண்டி, இந்த நூலில் வரும் கதைகள் ஒவ்வொன்றும் ஈரான் சமூகத்தின் பல்வேறு முகங்களை காட்டுகின்றன. மாணவர்கள், கலைஞர்கள், மதகுருக்கள், பெண்கள், தொழிலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை அனுபவங்கள் இதில் இடம்பெறுகின்றன. அவர்களின் வாழ்க்கையில் அரசியல் மற்றும் மதம் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பதையும், அதே நேரத்தில் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி சுதந்திரம், கல்வி, காதல், சமத்துவம் போன்ற கனவுகளை காக்க முயல்கிறார்கள் என்பதையும் இந்த நூல் வெளிப்படுத்துகிறது. இந்த கதைகள் மூலம் ஈரான் என்பது ஒரே மாதிரியான சமூகம் அல்ல; மாறாக பல கருத்துகள், பல கலாச்சாரங்கள் மற்றும் பல வாழ்க்கை முறைகள் கலந்து உருவான ஒரு சிக்கலான மனித சமூகமாக இருப்பதை வாசகர் புரிந்து கொள்ளலாம். 

இந்தப் புத்தகத்தில் இடம்பெறும் பல கதைகள் சமூக மாற்றம் மற்றும் தலைமுறை வேறுபாடுகளை மிகவும் தெளிவாக காட்டுகின்றன. பழைய தலைமுறை பாரம்பரியம், மத நம்பிக்கை மற்றும் குடும்ப மரபுகளை மிகவும் முக்கியமாகக் கருதுகிறது. அதே நேரத்தில் புதிய தலைமுறை உலகளாவிய கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்டு வளர்ந்ததால், அவர்கள் சுதந்திரம், தனிப்பட்ட தேர்வு மற்றும் சமத்துவம் போன்ற மதிப்புகளை அதிகமாக பேசுகின்றனர். இந்த இரு தலைமுறைகளுக்கிடையே உருவாகும் எண்ணப்போக்கின் வேறுபாடுகள் ஈரான் சமூகத்தின் தற்போதைய மாற்றத்தை பிரதிபலிக்கின்றன.

எழுத்தாளரின் நோக்கம்

இந்த நூலை எழுதிய Tara Kangarlou ஒரு பத்திரிகையாளர். அவர் ஈரானில் பிறந்தவர்; பின்னர் அமெரிக்காவில் வாழத் தொடங்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஈரானுக்கு சென்று, அங்கு வாழும் பல்வேறு சமூக பின்னணியிலுள்ள மக்களுடன் உரையாடி அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்தார். 

நான் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்து “The Heartbeat of Iran” என்ற நூலை ஆய்வு செய்து எழுதினேன். அதன் நோக்கம் — இன்றும் ஈரானில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈரான் மக்களின் வாழ்க்கையை உலகத்திற்கு திறந்து காட்டுவது. ஏனெனில், பல நேரங்களில் அந்த மக்கள் அரசியல் கதைகளில், அணு பேச்சுவார்த்தைகளில், மற்றும் சுருக்கமான செய்தித் துணுக்குகளில் மட்டுமே குறைக்கப்பட்டு பேசப்படுகிறார்கள். அவர்களின் உண்மையான வாழ்க்கை பலமுறை மௌனமாக்கப்படுகிறது. அதனால்தான், உலகம் முழுவதும் இருக்கும் என் வாசகர்களுக்கு நான் நினைவூட்ட விரும்பியது ஒன்றுதான். ஒவ்வொரு நாட்டின் பின்னாலும், சாதாரணமாக வாழும் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் வெறும் அரசியல் கதைகளின் பகுதியல்ல. அவர்கள் வாழவும், கனவு காணவும், இந்த உலகில் தங்களை ஒருவர் கவனிக்க வேண்டும் என்று விரும்பும் சாதாரண மனிதர்களே என்கிறார் தாரா. 

ஈரான் சமூகத்தின் முகங்கள்

 

ஈரானில் பெண்களுக்கு பல சமூக கட்டுப்பாடுகள் இருந்தாலும், சில பெண்கள் அந்த எல்லைகளை உடைத்து தங்கள் கனவுகளை அடைய முயல்கிறார்கள். புத்தகத்தில் வரும் ஒரு பெண், சிறு வயதிலிருந்தே கார் ரேசிங் மீது ஆர்வம் கொண்டிருந்தார். சமூக எதிர்ப்புகளையும் குடும்ப அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அவர் ஈரானின் முதல் பெண் ரேஸ் கார்டிரைவர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது கதை பெண்களின் உறுதியையும் சுதந்திரம் பற்றிய ஆசையையும் வெளிப்படுத்துகிறது.

இந்த நூலில் வரும் மற்றொரு நபர் பார்வை இழந்திருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கிறார். இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற அவரது எண்ணம், உடல் குறைபாடுகளைக் கூட தாண்டி அவரை சமூக செயற்பாட்டாளராக மாற்றியது. ஈரான் போன்ற நாட்டில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பேசுவது கூட சில நேரங்களில் சவாலாக இருக்கும்; ஆனால் அவர் தன்னம்பிக்கையுடன் தனது பணியை தொடர்கிறார். மேலும், ஒரு இளம் மனிதர் சிறு வயதிலிருந்து மதகுருவாக வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தார். ஆனால் வளர்ந்தபோது அவர் தனது பாலின அடையாளம் வேறுபட்டது என்பதை உணர்கிறார். இது அவரது வாழ்க்கையில் பெரிய உள்மனப்போராட்டத்தை உருவாக்குகிறது. மத நம்பிக்கை மற்றும் தனிப்பட்ட அடையாளம் ஆகியவற்றுக்கு இடையில் அவர் சந்திக்கும் சிக்கல்கள், ஈரான் சமூகத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றன.

ஈரான்–ஈராக் போர் காலத்தில் பலர் தங்கள் குடும்பங்களையும் வாழ்க்கையையும் இழந்தனர். இந்த நூலில் ஒரு முன்னாள் படைவீரரின் கதை வருகிறது. போரின் கொடுமையை நேரில் பார்த்தவர் என்றாலும், அவர் தனது நாட்டின் எதிர்காலத்தை அமைதியாகவும் முன்னேற்றமாகவும் பார்க்க விரும்புகிறார். அவரது நினைவுகள் போரின் வலியையும் மனித மனத்தின் தாங்கும் சக்தியையும் காட்டுகின்றன. ஈரானில் சில கலைஞர்கள் தங்கள் கலை மூலம் சமூக பிரச்சினைகளை வெளிப்படுத்த முயல்கிறார்கள். ஒரு இளம் திரைப்பட இயக்குனர் தனது படங்களில் பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக மாற்றம் பற்றி பேசுகிறார். அதிகாரப்பூர்வ தணிக்கை இருந்தாலும், கலை மூலம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்ற அவரது முயற்சி மிகவும் துணிச்சலானது.

மேலும் இந்த நூல் கலாச்சார அடையாளத்தின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. ஈரான் மிகவும் பழமையான நாகரிக வரலாறு கொண்ட நாடு. கவிதை, இலக்கியம், இசை, கட்டிடக்கலை போன்ற பல கலாச்சார மரபுகள் அங்கு தலைமுறைகள் தாண்டி வாழ்ந்து வருகின்றன. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் இந்த கலாச்சாரத்தை பெருமையாக நினைக்கிறார்கள். குடும்ப விழாக்கள், பாரம்பரிய உணவுகள் மற்றும் சமூக நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக இருக்கின்றன. அத்துடன் புத்தகத்தில் வெளிநாட்டில் வாழும் ஈரான் மக்களின் கதைகளும் இடம்பெறுகின்றன. அவர்கள் தங்கள் தாய்நாட்டை விட்டு சென்றாலும், ஈரான் கலாச்சாரம், உணவு, மொழி ஆகியவற்றுடன் அவர்களுக்கு இருக்கும் உணர்ச்சி தொடர்பு மிகவும் வலுவானதாக உள்ளது. தாய்நாட்டின் நினைவுகளும் புதிய வாழ்க்கையின் சவால்களும் அவர்களின் கதையில் ஒன்றாக கலந்து காணப்படுகின்றன.

இந்த நூலில் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி பற்றியும்  பேசப்படுகிறது. ஈரானில் பல இளைஞர்கள் பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முன்னேற முயல்கிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு மாணவர்கள் உயர்கல்விக்காக செல்லுகின்றனர். இந்த கல்வி வாய்ப்புகள் அவர்களின் எண்ணங்களையும் வாழ்க்கை பார்வையையும் மாற்றுகின்றன. அதே நேரத்தில் அவர்கள் தங்கள் நாட்டின் கலாச்சார அடையாளத்தையும் காப்பாற்ற முயல்கிறார்கள். இந்த தலைமுறை எதிர்கால ஈரானை மாற்றக்கூடிய சக்தியாக இந்த நூல் காட்டுகிறது

பொருளாதார சவால்களும் இந்த நூலில் ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. சர்வதேச பொருளாதார தடைகள் மற்றும் அரசியல் பதற்றங்கள் காரணமாக ஈரானில் வேலை வாய்ப்புகள் மற்றும் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படுகின்றன. ஆனால் இந்த சவால்களையும் தாண்டி மக்கள் தங்கள் குடும்பத்தை பாதுகாக்கவும், குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்கவும் முயல்கிறார்கள். இந்த மன உறுதி ஈரான் மக்களின் முக்கியமான தன்மையாக இந்த நூல் காட்டுகிறது.

நூலின் செய்தி 

ஒரு நாட்டின் அரசாங்கம் அல்லது அரசியல் செய்திகள்  மட்டும் அந்த நாட்டின் முழு உண்மையை பிரதிபலிக்காது. அந்த நாட்டின் உண்மையான அடையாளம் அதன் மக்களின் வாழ்க்கை அனுபவங்களிலும் உணர்ச்சிகளிலும் உள்ளது. எழுத்தாளர் எந்த அரசியல் தரப்பையும் ஆதரிக்காமல், மக்களின் உணர்வுகளை நேரடியாக வெளிப்படுத்த முயல்கிறார். சிலர் அரசின் கட்டுப்பாடுகளை விமர்சிக்கிறார்கள்; சிலர் தங்கள் நாட்டின் பாரம்பரியத்தை பெருமையாகக் கூறுகிறார்கள்; இன்னும் சிலர் வெளிநாட்டில் வாழும் ஈரான் குடியேறிகளின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார்கள். இவ்வாறு பலவிதமான குரல்கள் ஒன்றாக சேரும்போது, ஒரு நாட்டின் உண்மையான சமூக இதயத் துடிப்பை வாசகர் உணர முடிகிறது. அதனால் தான் இந்த நூலுக்கு “Heartbeat” என்ற பெயர் பொருத்தமாக உள்ளது.

மொத்தத்தில், The Heartbeat of Iran என்பது ஈரான் பற்றிய அரசியல் விவாதங்களைத் தாண்டி அந்த நாட்டின் மனிதர்களின் உண்மையான குரலை உலகிற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கியமான நூலாகும். உலகம் முழுவதும் இருக்கும் வாசகர்களுக்கு, குறிப்பாக ஈரான் பற்றி ஆழமாக அறிய விரும்புபவர்களுக்கு, இந்த நூல் ஒரு உணர்ச்சி மிக்க சமூகப் பயணத்தை வழங்குகிறது. இந்தப் புத்தகம் ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை, ஈரான் சமூகத்தை ஒரு புதிய பார்வையில் புரிந்து கொள்ளவும் உதவுகிறது.