பசுமை அழிப்பு சாலையை உடனடியாக கைவிடு

மத்திய அரசின் பாரத்மலா ப்ரயோஜனா திட்டத்தின்கீழ்
சேலம் – சென்னை இடையே ரூ 10,000 கோடி மதிப்பீட்டில் புதிய 8 வழி (பசுமை?) விரைவு சாலை அமைத்திடும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் மாதம் அறிவித்தார். ஏற்கனவே இருக்கும் 4வழிச்சாலையில் எவ்வித பிரச்சனைகளும் இல்லாத நிலையில் யாருக்காக இத்திட்டம்.?

சேலத்திலிருந்து அரூர், ஊத்தங்கரை,செங்கம்,போளூர் ஆற்காடு திருவண்ணாமலை& காஞ்சிபுரம் மாவட்ட வழியாக தாம்பரம் முதன்மைச் சாலையை அடையும் வகையில் புதிய 8 வழி சாலை அமைக்கப்பட இருக்கிறது
இதனால் சேலம் முதல் சென்னை வரையிலான பயணநேரம் 2மணி 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் சேலம் முதல் செங்கல்பட்டு வரையிலான பயணம் 3மணி நேரம் மட்டுமே. செங்கல்பட்டு முதல் சென்னை நகரத்திற்கும் இடைப்பட்ட 55kms -ஐ கடப்பதற்கு 2.30மணிநேரம் ஆகிறது.
இப்போதிருக்கும் நான்குவழிச்சாலைக்கான சுங்கச்சாவடி கட்டணம் 1கிலோமீட்டருக்கு 1ரூபாய் 50பைசாவாக உள்ளது. இது 8வழிச்சாலையில் கிலோமீட்டருக்கு 4முதல்6 ரூபாயாக உயரும்.
எனவே இத்திட்டம் அடிப்படையிலேயே மக்களுக்கானதல்ல தனிப்பெரும் முதலாளிகளுக்கானது நாம் உணர வேண்டும்.

இத்திட்ட செயல்பாட்டில் இயற்கை
கனிம வளங்கள் முற்றிலும் கொள்ளையடிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதுடன் காடுகள், மலைகள், ஆறுகள் முற்றிலும் அழிக்கப்படும்.
மேலும் இது எதிர்காலத்தில் வரப்போகும் வெளிநாட்டு தொழிகங்களுக்கான போக்குவரத்து மேம்பாடேயாகும்.

(குறிப்பு : சேலம் மாவட்டம் டால்மியா சிமென்ட் நிறுவனம் 28km-ஐ பாலைவனமாக்கியுள்ளது)

இத்திட்டத்திற்காக அரசு 7500 ஏக்கர் விளைநிலங்கள், 500 ஏக்கர் வனப்பகுதி, 7ஆறுகள் மற்றும் 8மலைகள் ஆகியவற்றை முற்றிலும் அழிக்கத் தயாராக உள்ளது.

இதனால் தமிழகத்தில் 150 கிராமங்களில் விளைநிலம் பாதிக்கப்படும். அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக்குள்ளாகும்.

(குறிப்பு : National Highway Authority -ன் கணக்குப்படியும் சில கட்டுமானப் பொறியியல் நிபுணர்களின் குறிப்புகள் படியும், நான்கு வழிச்சாலைக்கான செலவுகளை வைத்துப் பார்க்கும்பொழுது 4000கோடி (including commissions) செலவில் இந்த 8வழிசாலை திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தலாம் என உள்ளது. இதில் மீதம் 6கோடி யாருக்கு ஒதுக்கியது.?
இதில் 2000கோடிக்கான ஒப்பந்தம் முதலமைச்சரின் சம்பந்தி திரு.வெங்கடாஜலபதி அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
எனவே நிதி ஒதுக்கீட்டிலேயே அதீத ஊழல் நிகழ்ந்திருக்கிறது.)

இதற்காக சேலம் எருமாபாளையம், ஜருகுமலை, சன்னியாசிகுண்டு, நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி, கஞ்சமலை, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தும் பணியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதிய 8 வழி சாலை அமைப்பதற்காகக் காடுகளை அழிப்பதற்கும், மலைகளைக் குடைவதற்கும் வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சேலம் மாவட்டம், எருமாபாளையம் அடுத்த பனங்காடு கிராமத்தை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட பனங்காடு கிராம மக்கள் கூறுகையில், “எருமாபாளையம், பனங்காடு பகுதிகளில் நாங்கள் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு விவசாயத் தொழில் தான் வாழ்வாதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து 8 வழி பசுமை விரைவு சாலைக்காக நிலம் கையகப்படுத்த சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு முட்டுக்கல் நட்டு சென்றுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதனைக் கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சேலம் – சென்னை இடையே 8 வழி பசுமை சாலையால் எந்தப் பயனும் இல்லை. எனவே இதைக் கைவிட வேண்டும்” என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

  • •சர்வதேச நிறுவனங்களிடம் பெரும் வட்டிக்கு கடன் வாங்குதல் –மற்றும் தனியாருக்கு மக்கள் வரிப்பணத்தை வழங்குதல்- இவற்றை வளர்ச்சி என்று சொல்வதை நிறுத்து.
  • •வளர்ச்சி என்ற பெயரில் ஊழல் மற்றும் மக்கள் வரிப்பணத்தை தனியார் சூறையாடுதலை நிறுத்து.
  • •கட்டணச் சாலை முறையை நிறுத்து. அதன் மூலம் போக்குவரத்துக்கான நேரம் மற்றும் நெருக்கடிகளை குறைக்க முடியும்.
  • •ஏற்கனவே இருக்கும் சாலைகளை திருத்தி அமை- சாலை ஒர கிராமங்கள் மற்றும் இயற்கை வளங்களை மேம்படுத்த மேலதிக நிதியை ஒதுக்கு.
  • •மக்களுக்கான போக்குவரத்தை மேம்படுத்து. புதிய பேருந்துகளை அறிமுகம் செய்தல் –பேருந்து கட்டணத்தை குறைத்து ஏற்கனவே இருக்கும் சாலைகளை திருத்துதல். இயற்கை வளங்களை பாதிக்காத முறையில் புதிய வளர்ச்சிகளை செய்தல் போன்றவை மக்கள் போக்குவரத்தை மேம்படுத்த உதவும். சேலம் சென்னை சாலை திட்டம் மூலம்- பெரும் கார்பறேட்டுகள் –மற்றும் சொற்ப என்னிக்கையில் செல்வந்தோர் மட்டுமே பயனடைவோர்.
  • •தமது வாழ்வாதாரம் மற்றும் இயற்கை வளங்களை காக்கப் போராடும் மக்களை ஒடுக்கும் செயல்களை உடனடியாக நிறுத்து.
  • •இயற்கை வளம் மற்றும் அவற்றைப் பராமரிக்கும் கட்டுப்பாட்டை சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வா . அதன் மூலம் மட்டுமே இயற்கை மாசு படுத்தல் செய்யாத வளர்ச்சி சாத்தியம்.

வளர்ச்சி என்னும் பெயரால் இயற்கை வளங்கள் கொள்ளைப் போவதைத் தடுப்போம்!
அடுத்தத் தலைமுறைக்கு இப்புவியை வாழ்வதற்கு உகந்த இடமாக விட்டுச் செல்வோம்!!

தோழமையுடன்_
புதிய பொதுவுடைமை இயக்கம்
New Socialist Alternative (CWI_INDIA)