பொய்களும் – பிரட்டல்களும் – மாற்று ஊடகத்தின் தேவையும்

கன்சவேட்டிவ் (டோரி) கட்சி இந்த தேர்தலில் செய்யும் விளம்பரங்களில் 88% (5,952) வீதமானவை வெறும் பொய்ப் பிரச்சாரம் என ஒரு ஆய்வு சுட்டிக் காட்டி உள்ளது. இதே சமயம் கோர்பின் விளம்பரங்களில் ஒன்றைக் கூட பொய்ப் பிரச்சாரம் என இந்த ஆய்வால் சுட்ட முடியவில்லை.

பி பி சி உட்பட இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் எல்லாப் பெரும் ஊடகங்களும் கோர்பினைக் கடுமையாக எதிர்த்து வருவதும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து வருவதும் நாம் பார்க்கலாம். பி பி சி யின் அரசியல் ஆசிரியராகவும் முன்னணி ஊடகவியலாளராகவும் இருக்கும் லோரா கின்ஸ்பெர்க் கோர்பின் பற்றி தவறான பிரச்சாரங்களைச் செய்து வருவதை பி பி சி சார் அமைப்பே குற்றம் சாட்டி உள்ளது (https://www.bbc.co.uk/news/entertainment-arts-38666914). தமக்கிடையே ஐந்து மில்லியனுக்கும் மேல் பத்திரிகை விற்பனை செய்யும் Daily Mail – The Sun ஆகிய பத்திரிகைகள் மிக கேவலமான பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறன. இவர்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரம் மற்றும் கேவலமான திரிபுகள் தவறு என தெரிந்தும் ஊடக நெறிப்படுத்துவோர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கலாம் என அவர்கள் தெரிவித்திருகிறார்கள். இதனால்தான் ஜார்ஜ் மொம்பியோ போன்ற ஊடக வியலாளர்கள் ஊடக நெறி முறை தடுப்பையும் மீறி தாம் எழுத வேண்டி வந்துள்ளது என தெரிவித்துளார்கள் (https://www.theguardian.com/commentisfree/2019/dec/10/break-embargo-expose-press-lies-labour).

இதுவும் வர்க்கப் போரின் ஒரு வடிவமே. மக்கள் மத்தியில் பொய்களைப் பரப்பி பொய்களின் அடிப்படையில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வது வலது சாரிகளின் பண்பாக இருந்து வருவது உலக வரலாறு. அதற்குத் துணையாக அனைத்து வலது சாரி ஊடகங்கள் – மற்றும் அதிகார நிறுவனங்கள் துணை போவது வழமை. ஒரு இடது சாரிய நிலைப்பாட்டோடு மக்கள் நலன் சார் கொள்கைகளை நிறைவேற்றுவேன் எனச் சொல்லி ஒருவர் தேர்தலில் வெல்லும் சந்தர்ப்பம் வரும்பொழுது அவர்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு எதிர்க்கிறார்கள். இவற்றை எல்லாம் மீறி மக்களிடம் சென்றடைவது மிகப் பெரும் சவால். சமூக வலைத் தளங்கள் – மற்றும் தொழிற் சங்கங்கள், போராட்ட அமைப்புக்கள் ஆகியவற்றின் ஊடாக சென்றடைதல், பொதுக் கூட்டம் – தெருவில் வேலை செய்தல் – வீடு வீடாக செல்லுதல் என்ற நடவடிக்கைகள் போன்ற மக்கள் சார் நடவடிக்கைகள் நோக்கி திரும்பாமல் இடது சாரியக் கருத்துகளை எடுத்துச் செல்ல முடியாது. இதனாலும்தான் இடது சாரிய ஊடகங்களை வளர்த்தெடுத்தல் அத்தியாவசியமாக இருக்கிறது.

ரோத்மியர், மேர்டொக் ஆகிய பில்லியனர்கள் பெரும்பான்மை பிரித்தானிய ஊடகங்களைத் தங்கள் கைகளில் வைத்திருகிறார்கள். News UK, Daily Mail Group and Reach ஆகிய மூன்று கம்பனிகள் மட்டும் 83% ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருகிறார்கள் (https://www.mediareform.org.uk/media-ownership/who-owns-the-uk-media). தமது கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களை அவர்கள் தமது பிரச்சாரத்துக்கும் – விளம்பரத்துக்கும் – காசு பார்ப்பதற்கும் மட்டுமே பயன் படுத்திக் கொள்கிறார்கள். இந்த ஊடகங்கள் தனித்துவமானவையோ – அல்லது நடுநிலை கொண்டவையோ அல்ல. எவ்வாறு இந்திய இலங்கை ஊடகங்கள் காசு வாங்கி விட்டு காசு தந்தவர்களுக்கு ஏற்ப செய்தி போடுகிறார்களோ அதையேதான் இவர்களும் செய்கிறார்கள். இதனால்தான் சரியான செய்தி மக்கள் மத்தியில் போய்ச் சேர்வதில்லை.

தமிழ் பேசும் மக்கள் மத்தியிலும் இதே நிலவரம்தான் வளர்ந்து வருகிறது. தமிழ்வின் போடும் செய்திகளை யாரும் நம்ப முடியாத நிலைதான் உருவாகி வருகிறது. தமிழ் கார்டியன் வலது சாரிய அடிப்படையில் இயங்குவதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். காசு வரும் இடத்துக்கு விசுவாசமாக இருப்பதை நடுநிலை எனவும் செய்தி – விபரம் எனவும் இவர்கள் விற்கிறார்கள். தவறைச் சுட்டிக் காட்டினால் அது ‘மாற்று உண்மை’ என சில கேவலமான பேச்சு பேசுவதையும் பார்கிறோம்.

இதனால்தான் சுதந்திரமான மக்கள் ஊடகம் அவசியம் என நாம் பேசுகிறோம். சமரசமின்றி மக்கள் பக்கம் நிற்கும் மக்கள் சார் இடது சாரிய ஊடகம் ஒன்றைக் கட்டி எழுப்ப வேண்டும் என நாம் பாடு படுகிறோம். எதிர் மீடியா என்ற ஊடகத்தை பலர் இணைந்து ஆரம்பித்தது இதனால்தான். இக்கட்டுரையை வாசிப்பவர்கள் தயவு செய்து அந்த வேலைக்கு உதவ முன்வர வேண்டும். பின்வரும் தளங்களில் நாம் எழுதுபவை பேசுபவை பற்றி நீங்கள் பார்க்கலாம்.

எதிர்

https://www.facebook.com/ethirmedia/

https://www.youtube.com/c/ethirmedia

சமூகம் பற்றிய அக்கறை உள்ளவர்கள் இந்த முயற்சியை முன்னெடுக்க முன் வாருங்கள். உரையாடல் மற்றும் எழுதுவதில் கலந்து கொள்ளுங்கள். தவறுகளைச் சுட்டிக் காடுங்கள் – சரிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள். அனைவரும் இணைந்து ஒரு மக்கள் ஊடகத்தை நாம் வளர்த்தெடுப்பதும் போராட்ட அரசியலை முன் நகர்த்திச் செல்ல அத்தியா அவசியம்.

போரிஸ் பொய்கள்.
குறைந்தது 60 பொய்களை போரிஸ் சொல்லி வருகிறார் என வரிசைப்படுத்தப் பட்டுள்ளது (https://www.mirror.co.uk/news/politics/60-lies-boris-johnson-tory-21065956).
ஏற்கனவே வேலை செய்து வரும் குறைந்தது 16 000 தாதியரை வேலை நீக்காமல் செய்வதை உட்படுத்தி 50 000 தாதியரை வேலைக்கெடுப்பதாக ஒரு பொய்யை அறிவித்தார்கள். மருத்துவ சேவைகளை தாம் தனியார்மயப் படுத்தப் போவதில்லை எனவும் அது பற்றி அமெரிக்காவுடன் பேசவில்லை எனவும் இன்னுமொரு பொய்யைச் சொல்லி வருகிறார்கள். ஏற்கனவே இருக்கும் வைத்தியசாலைகளை திருத்துவதற்கு சொற்ப பணத்தை ஒதுக்கி விட்டு தாம் புதியதாக 40 வைத்திய சாலைகளைக் கட்ட இருப்பதாக புளுகித் தள்ளுகிறார்கள். இவை தவிர ஜெரேமி கோர்பின் சொல்லாததை எல்லாம் அவர் சொல்வதாக ஏராளமான பொய்கள் பரப்பப் பட்டு வருகிறது.
தமிழ் டோரிகளும் இதற்கு சளைக்காமல் பொய் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இலங்கையில் இரு தேசியத்தை டோரி கட்சி அங்கீகரிக்கும் என்ற ஒரு பொய்யை பரப்ப முயன்று அவர்கள் மூக்குடைபட்டது பார்த்திருப்பீர்கள். இலங்கையில் ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கத்தை பாதுகாத்துக் கொண்டு அவர்கள் இங்கு வாழ் மக்களை ஏமாற்றும் வித்தைகள் செய்ய முயற்சிக்கிறார்கள்.
கடந்த இலங்கை சனாதிபதி தேர்தலில் கோத்தபாயவுக்கு தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட பரம் நந்தா என்ற டோரி கவுன்சிலர் ஒருவர் ஐ.பி.சி விவாதம் ஒன்றில் பங்கு பற்றி பேசிய விசயத்தை கண்டு கண் குளிராதவர்கள் அதை இங்கு பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=iyBNTLqNOZg&feature=youtu.be&fbclid=IwAR0-ol4J0PwO5CcikX3Bpm5leuBHGrw7D1CYcm_qRuVARidq__KtBb7YQ5k

இங்கிலாந்தில் ஒரு கட்சி சார்பாக தேர்தலில் நிற்பதற்கு என்ன செய்ய வேண்டும் என ஊடகவியலாளர் சதீஸ் கேட்டதற்கு அவர் சொன்ன பதிலை பாருங்கள். அவர் சொல்கிறார்.
‘தேர்தலில் வேலை செய்வதற்கு பணம் தேவை. நாங்கள் கட்சிக்கு பணம் சேர்த்துக் கொடுக்க வேண்டும். ஒரு தேர்தலில் ஒரு தொகுதியில் முப்பதாயினாயிரம் பவுன்ஸ் செலவழிக்க வேண்டும். அதை விட இரண்டு மூன்று வருஷம் அங்க வேலை செய்ய வேண்டும். வேலை செய்யாமல் 365 நாளும் வேலை செய்ய வேண்டும். அவ்வாறு வேலை செய்வதானால் நாங்களும் பண பலம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரண்டும் இருந்து எங்களது மக்கள் ஆதரவும் இருந்தால்தான் …. இந்தியர்கள் தங்களுக்கு என ஒரு குறுப் வத்திருக்கிரான்கள். லார்ட் ரங்கே தலைமையில் பல மில்லியனர்கள் எல்லாம் சேந்து ஒரு பன்ட் வைச்சு –கவுன்சிலர்ஸ் – தலைவர்களை அடையாளப்படுத்தி – அவர்களுக்கு ட்ரைனிங் குடுத்து இண்டைக்கு 23 இந்தியர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். அது அவர்களது கெட்டித்தனம். அதே மாதிரி ஆபிரிக்கன்சும் அவர்களுக்கு என ஒரு அமைப்பு வைச்சு –அந்தந்த நாட்டு அரசாங்கங்களே காசு கொடுத்து .இதுகளுக்கூடாக அவர்கள் தங்கள் தங்கள் நாட்டு அரசாங்கங்கள் சார்ந்து அவர்கள் லொபி பண்ணக் கூடியதாக இருக்கிறது. ஆகவே இவ்வாறான வேலைகளைச் செய்கிறார்கள்.’
காசு வைப்பவர்தான் தேர்தலில் நிற்க முடியும் என இலகுவாக விஷயத்தை முடித்து விட்டார் பாருங்கள். கன்சவெடி கட்சி ‘ட்ரையினிங்’ அப்படி. அது மில்லியனர்கள் கட்சி என நாம் சொல்வது ஏன் என இப்போது உங்களுக்கு விளங்க வேண்டும். ஆனால் இதை அவர்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை. இது தவிர ஆபிரிக்கர்கள் எவ்வாறு அந்த நாடுகளிடம் காசு வாங்கி அந்த அந்த நாடுகளுக்கு லொபி செய்வதற்கு தேர்தலில் நிற்கிறார்கள் என சொல்கிறார் பாருங்கள். டோரி கட்சியின் சார்பாக கவுன்சிலராக இருப்பவர் சொல்கிறார்! இது ஆங்கில ஊடகங்களுக்கு (சிலர்) தெரிந்தால் கட்சியின் கதை முடிந்து விடும். இதே லாஜிக் அடிப்படையில்தான் அவர் இலங்கை அரசிடம் போய் நிற்கிறார் போலும்.
கவனம் மக்களே.
இது போதாது என லிபரல் டெமொக்கிராட் கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுபவர் சொல்கிறார் ‘எங்களுக்கு ட்ரையினிங் குடுக்கிறாங்கள். குடுத்து பரீட்சை வைச்சு பாஸ் பன்னின பிறகுதான் எங்களை எம்பியாக நிற்க விடுவார்கள்’ என.
அவசரப்பட்டு சுவற்றில் தலையை முட்டி விடாதீர்கள். இதுதான் இவர்கள் முன் வைக்க வரும் அரசியற் பிரதிநிதித்துவம்.இதே கேவலத்தையும் அரசியல் பங்களிப்பு போதாமையையும் பயன்படுத்தி தான் இங்கிலாந்து வலது சாரியக் கட்சிகள் ஆசிய ஆபிரிக்கர்களை மேய்க்க முயல்கிறார்கள். இதனால்தான் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் நிமிர முடியாமல் திணறுகிறது.
அரியல் பிரதி நிதித்துவம் பரீட்சை வைத்து தெர்தேடுப்பதோ – மில்லியனர்களுக்கு டிரையினிங் கொடுத்தோ உருவாக்கப் படுவதில்லை. மாறாக மக்கள் மத்தியில் வேலை செய்வதில் இருந்தும் – மக்களின் உரிமைகளுக்காக போராடுவதிலும் இருந்தும் இது பிறக்க வேண்டும்.
இது போன்ற பின் தங்கிய அரசியல் நடைமுறைகள் கதைகள் பொய்கள் – ஆகியவற்றிலும் இருந்து மாறிய புதிய அரசியல் நோக்கி நாம் நகர வேண்டும். வாருங்கள்.