யார் இந்த ஜெரமி கோர்பின்

815 . Views .

2001 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்கொய்தா உட்பட 21 அமைப்புகளை தீவிரவாத பட்டியலில் சேர்த்து – UK இல் அந்த அம்மைப்புகளை தடை செய்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆளும் கட்சியாக இருந்த தொழிற் கட்சியால் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்தை 17 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதில் பின்வரிசைப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த ஜெரமி கோர்பினும் , ஜோன் மக்டொனல்டும் எதிர்த்து வாக்களித்தவர்கள் ஆவர். இதனால் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார் என்று இவர்கள் இருவருக்கும் எதிராகக் குற்றம் சாட்டப் பட்டு வருகிறது.

இந்த குற்றச் சாட்டலுக்குப் பின்வருமாறு பதிலளிக்கிறார் கோர்பின்.
‘’குறிப்பிடப்பட்ட 21 அமைப்புகள் இந்த நாட்டில் தடை செய்யப் பட்டால் இஸ்லாமிய ,குர்திஷ் , தமிழ் , காஷ்மீர் இன மக்கள் குழப்ப நிலை அடைவார்கள். இதனால் அந்த மக்கள் தீவிரவாதற்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்ற கருத முடியாது. விடுதலை போராட்ட அமைப்புகள் சமாதானப் பேச்சு வார்த்தைகள் மூலமாக நிரந்தரத் தீர்வுக்கு நகர்வதை ஊக்குவிக்கின்றனர். பல அமைப்புகள் அவ்வாறு போர் நிறுத்தம் செய்து தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வினை நோக்கி நகர்வதை காணலாம் ‘’ என்கிறார்

தான் உறுப்பினராக அங்கம் வகிக்கும் ஆளும் கட்சியின் தீர்மானம் என்றாலும் மக்கள் நிலை உணர்த்து செயற்பட்டவர் அவர். அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைபுக்களின் நிலைப்பாடும் மற்றய விடுதலைப் போராட்ட அமைப்புகளினது நிலைப்பாடும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து அன்றே செயல்பட்டவர் தான் இன்றைய தொழிற் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் ஆவர். இது தான் ஜெரமி கோர்பினின் அடிப்படை நிலைப்பாடு. அதாவது மக்களின் உரிமைகள் சார்ந்த விடயத்தின் மையத்தை மக்கள் மத்தியிலே நின்று அணுகுவது.

2015 ஆம் ஆண்டு கோர்பின் தொழிற் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போது Jeremy Corbyn is Bad News for Sri lanka but good News for LTTE terrorist என்றும் , Ceylon today இணையத்தளம் Corbyn and the Tamil Tigers என்றும் கட்டுரை வரைந்தார்கள். அந்தக் கட்டுரைகளின் முக்கிய புள்ளிகள்

● 1970 களில் தான் சார்ந்திருந்த தொழிற் சங்கம் மூலம் விடுதலை இயக்கங்களுக்கு பண உதவி செய்தார்

● 1983 ஆம் ஆண்டு முதல் தமிழர்கள் மீது இலங்கையில் படுகொலை நடத்தப் பட்டது என்றார்

● தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனம் என்று அவர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரித்தார்

● 2005 ஆம் விடுதலை புலிகள் மீதிருந்த தடையை நீக்க நடைபெற்ற கையெழுத்து போராட்டத்தை உருவாக்கி நடத்த உதவினார்.

● 2009 ஆம் ஆண்டில் ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். இந்தப் போர் மக்கள் மீதான படுகொலை. இதனை உடனே நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பாராளுமன்த்தில் கூறினார்

● இலங்கை அரசாங்கத்தை காமன் வெல்த் நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்க பரிந்துரை செய்தார்.

● இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றார்

இவ்வாறான கோர்பினின் தமிழ் பேசும் மக்கள் மீதான வன்முறைக்கு எதிரான குரலை இலங்கை அரசாங்கம் மீதான காழ்ப்புணர்வு கொண்டோரின் நடவடிக்கை போல் சித்தரிக்க முற்படுகிறார்கள்.

மேலும் 1980 களில் இருந்து புலம் பெயரத் தொடங்கிய நம் மக்களை அன்றில் இருந்து இன்று வரை அவர்களுக்கான உரிமைகளுடன் பாதுகாப்பாக இருப்பதற்காக முழு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்கிறார். 1987 களில் இலங்கை _ இந்தியா ஒப்பந்தத்துடன் நாட்டில் சமாதானம் சூழ்நிலை திரும்பி விட்டது என கூறி ஆயிர கணக்கானோரை விமானங்களில் ஏற்றினர். அத்தருணங்களில் விமான நிலையத்துக்கு நேரில் சென்று போராடி மக்களை திருப்பி அனுப்பாமல் தடுத்தார் கோர்பின்.

ஒரு புறம் மக்கள் மீதான படுகொலைகளை கண்டித்தும் , மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வில்லை என்று கூறி கொண்டு – மறுபுறம் புலம் பெயர்ந்து இருக்கும் மக்களை நாட்டில் பிரச்சனைகள் இல்லை எனக்கூறி திருப்பி அனுப்ப முனையும் இரட்டைச் சூத்திரதாரி அல்ல கோர்பின். எங்கு வாழும் மக்களினதும் பிரச்சனைகளையும் மக்களின் பக்கம் நின்று தன் நிலைப்பாட்டை முன்வைப்பவர் அவர். 30 வருட கால கோர்பினின் அரசியலில் அதிகாரம் , பதவி , கட்சி , புகழ் என்பதற்காக அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிய வரலாறு இல்லை. இத்தகைய வரலாற்று பின்னணியால் தான் நாம் கோர்பின் கொள்கைகளை ஆதரிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

மேலும் வரும்…

-Nadesan-