வாடகைக்கு குடியிருப்போரின் கழுத்தை நெரிக்கும் வாடகைக்கு விடும் கம்பெனிகள்

மில்லியன் கணக்கான வருவாயைக் கொண்ட ஒரு சொத்து நிறுவனமான சிட்டி ரூம் (City room) என்ற, வீடு வாடகைக்கு விடும் நிறுவனம் அகதி தஞ்ச கோரிக்கையாளர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழ் அகதி ஒருவர் இந்த சிட்டி ரூம் நிறுவனத்தின் துன்புறுத்தலுக்கு உளாகி உள்ளார். கடந்த வருடம் தனது அகதி கோரிக்கை வழக்கின் சட்ட செலவுகள் காரணமாக தனது வீட்டு ஒப்பந்தத்தை தொடர முடியாத காரணத்தால் அறையை விட்டு வெளியேறுவதாக சிட்டி ரூம்கு இந்த அகதி கோரிக்கையாளர் தெரிவித்ததை தொடர்ந்து அவர் பல மிரட்டல்களுக்கு உள்ளாகி உள்ளார்.

சிட்டி ரூம் முகாமையாளர்  ஜியோவான்னி (Giovanni- Letting Manager) அவரை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக மிரட்டியது மட்டும் இன்றி துவேச முறையில் பேசி பணம் தரும்படி பலவந்த படுத்தி உள்ளார். அவரது ரூம்க்கு சென்று பொருட்களை எடுத்து வீசி விட இருப்பதாகவும் மிரட்டப் பட்டு உள்ளார்.

தற்போது அவர் வாடகை இருக்காத காலப் பகுதி மற்றும் அதற்கான வட்டி என பெரும்தொகை பணத்தை அவரிடம் சிட்டி ரூம் கோரி வருவதால் இது சம்பந்தமாக நீதி மன்றம் செல்லும் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டுள்ளார் இந்த அகதி.

சிட்டி ரூம்ஸ் – ஒலிவர் வேல்டன் லிமிடெட்டின் வர்த்தக பெயர். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு 2019 ஆம் கிட்டத்தட்ட £21 மில்லியனுக்கான வருவாயை தாக்கல் செய்தது, அதன் மொத்த லாபம்  £895,000. மற்றும் பங்குதாரர்கள் £850,000 ஈவுத்தொகையைப் பெற்று இருக்கின்றனர். இத்தகைய பெரும் லாபம் ஈட்டும் ஐந்தே நிறுவனம்தான் வசதி அற்ற அகதிகளை துன்புறுத்தி வருகிறது.

கொரோனா தொற்றின் போது நிதி நடத்தை ஆணையகம் சொத்து உரிமையாளர்களுக்கு விடுமுறைக்கான சலுகையை வழங்கியிருந்தது அறிவோம். வீடற்ற அனைவரையும் தற்காலிக வீடு வழங்க அரசாங்கம் கவுன்சிலைக் கட்டாயப்படுத்தி இருந்தது. குத்தகைதாரர் வெளியேற்றம் இடைநிறுத்தப்பட்டது. இவ்வாறு அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்த போதும் இந்த கம்பெனி அகதி தஞ்ச கோரிக்கையாளரிடம் பணம் பறிப்பதற்காக வழக்கு தொடுத்துள்ளது.

சில வீட்டு வாடகை நிறுவனங்கள் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் தனிமைப்படுத்தப்படுவதாலும் வேலை செய்வதற்கான உரிமை வழங்கப்படாத நிலை காரணமாகவும் அதிகம் வளைந்து கொடுப்பார்கள் என்று கற்பனை செய்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட இந்த அகதி தமிழ் சமூகத்தில் முக்கிய பணிகளில் ஈடுபட்டு வருபவர். செயற்பாட்டாளர்கள் மத்தியில் நன்கறியப் பட்டவர். அகதிகள் உரிமைகள் மற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பாளராகவும் இயங்கி வருபவர். இங்கிலாந்தில் இயங்கி வரும் சோஷலிச கட்சி உறுப்பினராகவும் மற்றும் இங்கிலாந்து தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் கமிட்டியின் செயற்குழு உறுபினரில் ஒருவராகவும்கூட இயங்கி வருபவர். இத்தகைய மக்கள் மத்தியில் நன்கறியப்பட்ட ஒருவருக்கே இத்தகைய தொல்லையை இந்த நிறுவனம் கொடுக்கிறது என்றால், மேலும் பலர் அதிக கொடுமையை அனுபவித்திருக்க கூடும் என லண்டன் வாடகை அசோசியேசன் உறுப்பினர் ஜேம்ஸ் ஐவன்ஸ் தெரிவித்தார். இந்த அமைப்பு மற்றும் பல்வேறு தொழிற்சங்க கிளைகள் இந்த நிறுவனத்துக்கு தமது கடுமையான கண்டனங்களை அனுப்பி உள்ளன.

சிட்டி ரூம் நிறுவனத்துக்கு எதிராக  ஏராளமானோர் இணைய வழியில் புகார் செய்துள்ளனர். இந்தே நிறுவனத்தால் பாதிக்கப் பட்டவர்கள் அது பற்றி பேச வெளிப்படையாக முன் வரவேண்டும் என தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு கோரிக்கை விட்டுள்ளது.

வீட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்காக கவுன்சில் வீடுகள் பெருமளவில் கட்டப்பட வேண்டும் மற்றும் வாடகை பணம் குறைந்தளவில் அறவிடப்பட வேண்டும். வாடகையாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும்  மற்றும் மிரட்டி பணம் பறித்தல் இல்லாமல் வெளியேறுவதற்கும் உரிமை வழங்கப்படவேண்டும். போன்ற கோரிக்கைகளை வலுப்படுத்தும் நடவடிக்கையை தாம் செய்வதாகவும் அதற்கான ஆதரவை தமிழ் மக்கள் வழங்க வேண்டும் எனவும் தமிழ் சொலிடாரிட்டி தெரிவித்துள்ளது.