லண்டன்  போராட்டத்தில், ஜேவிபி யின் இனவாதம். 

1,279 . Views .
 இலங்கையில் 83 ம் ஆண்டு இடம்பெற்ற  இனகலவரம்  கறுப்பு ஜூலை  என அழைக்கபடுவதும், அது நினைவாக போராட்டம் நடப்பதும் அனைவரும் அறிவர்.

1983  ல் இதே நாளில்  நடை பெற்ற இனக்கலவரம், மற்றும் சமகாலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முன்  வைத்து  பிரித்தானியா இலங்கை தூதரகத்திற்கு முன்பாக ஒரு ஆர்பாட்டத்தை இளைஞர்கள் மற்றும் தமிழ்சொலிடாரிட்டி அமைப்பினர் ஒழுங்கு செய்திருந்தனர். அதே இடத்தில் ஜனநாயக உரிமைகள் வென்றெடுக்க என ஜேவிபி ஒரு போராட்டத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அங்கு வந்து சேர்ந்த ஜேவிபி யினர் கதிகலங்கி கொதிப்படைந்தனர்.

 

தமிழர் போராட்டத்தோடு நாம் இணைந்து செய்ய மாட்டோம் – தமிழர்கள் இங்கிருந்து சென்றால் மட்டுமே நாம்  போராடுவோம் என அறிவித்தனர்.  உடனடியாக பொலிசாரை அழைத்து தமிழர்களை கலையுங்கள் என்றும், தங்களுக்கு மட்டும்தான் ‘அனுமதி’ வழங்கப் பட்டு இருக்கு என்றும் வாதாடினர். இலங்கை தூதரகத்தோடு இணைந்து நின்று கொண்டு அவர்கள் தமிழர் போராட்டத்தை எதிர்த்தனர்.  

நீங்கள் போராடும் உரிமையை நாம் எதிர்க்கவில்லை எனவும் அவர்களை ஒரு பக்கம் நின்று போராடும்படியும் நாம் கூறினோம் .ஜே வி பி உடன் வந்து சேர்ந்திருந்த ஒரு சில தமிழர்கள் கூட பேசிப்பார்த்தனர் (முன்னாள் கடும் புலி எதிர்ப்பாளர்கள் – மற்றும் புளொட் இயக்க உறுப்பினர் என சிலர் அவர்களோடு இணைந்து வேலை செய்து வருவதாக தெரிகிறது). சிங்கள இனவாத ஜே வி பி கடும் கொதிப்போடு பேசவே மறுத்து விட்டனர்.  

நாங்கள் அனைத்து ஒடுக்கப்படும் மக்களுக்காக போராடுகிறோம்- ஏன் உங்களுக்கு உடன் பாடில்லை? இதுதான் நீங்கள் ஜனநாயகத்திற்காக செய்யும் போராட்டமா என்ற கேள்வியை jvp யினரை நோக்கி மற்றவர்கள் முன்வைத்தனர்.   

தமக்கு அரசில உண்டப்படில்லை என ஒருவர் கூறினார். எத்தகைய உடன்பாடு இல்லை என்ற கேள்விக்கு பதில் வரவில்லை. உடன்பாடு இல்லாவிட்டலும் ஒரு பக்கத்தில் நீங்கள் போராடுங்கள் – மறுபக்கம் நாம் போராடுகிறோம் என்று சொல்லியும் பிரயோசனம் இருக்கவில்லை. கொதிப்போடு போலீசாரோடு பேசி தமிழர் போராட்டத்தை கலைக்கும் படி விடாபிடியாக நின்றனர்.  

நாங்கள் வைத்த கோரிக்கை.

  • இலங்கை அரசு – சர்வாதிகார, படுகொலை அரசு. 
  • பேச்சுரிமை, போராடும் உரிமை முதற்கொண்டு அனைத்து சனநாயக உரிமைகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை நிறுத்து.
  • கல்வி, சுகாதார துறைகளை தனியார் மயப்படுத்துவதை உடனடியாக நிறுத்து.
  • போராடுபவர்களை தாக்குவதை உடனடியாக நிறுத்து.
  • பொய் வழக்குகளை ரத்து செய்.
  • அரசியற் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்.
  • தமிழ் பகுதிகளில் இருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற, கைப்பற்றப்பட்ட  நிலங்களை மீட்டெடுக்க, சுய நிர்ணய கோரிக்கையை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்.

 

 இந்த எந்த கோரிக்கை அவர்களுக்கு உடன்பாடு இல்லை?

 

 இவ்வாறான மக்கள் கோரிக்கையை jvp யினர் மறுக்கின்றனர். தாங்கள் முற்போக்குவாதிகள் -மார்க்ஸிஸ்ட் கள் எனப் பறைசாற்றும் இவர்களது உண்மையான முகத்தை போராட்டத்தில் நின்றவர்கள் வெளிப்படையாக காணக்கூடியதாக இருந்தது.  இவர்களுக்கு தமிழ் பேசும் மக்கள் மீது ஒரு அக்கறையும் இல்லை. சிங்கள இனவாதம் தெருவில் நடைமுறையில் இருந்ததை பார்க்க கூடியதாக இருந்தது.  

பெளத்த இனவாத இலங்கை அரசிற்கும் jvp யினர் களுக்கும் வித்தியாசம் இல்லை என்பதை இவர்கள் நிரூபித்துள்ளார்கள். வடகிழக்கு பிரிப்பதற்கு இவர்கள் எப்படி பாடு பட்டார்கள் என்ற வரலாற்றையும் நாம் மறக்க முடியாது. அனைத்து ஒடுக்கப்படும் மக்களையும் ஒன்றினைப்பதற்கு இவர்களுக்கு எந்த திட்டமிடல்களும் இல்லை. இவர்கள் ஒரு இனவாத கட்சி என்பதை மீண்டும் மீண்டும் நிருபித்து வருகிறார்கள்.

2009ம் ஆண்டு மே 1 தொழிலாளர் தினத்தின்போது இவர்கள் அரச ஆதரவு கோசம் செய்தார்கள். தமிழ் மக்கள் படுகொலை நிகழ்ந்து கொண்டிருந்த தருனத்தில் இவர்கள் இவ்வாறு கோசமிட்டது ஏற்றுக் கொள்ள முடியாமல் மற்ற போராட்டக் காரர்களால்(தமிழர் அல்ல – இங்கிலாந்து தொழிலாளர்) மே தின ஊர்வலத்தில் இருந்து அடித்து துரத்தப் பட்டார்கள். இன்றும் அது நடந்திருக்கும். ஆனால் அத்தகைய நடமுறையை மறுக்கும் தமிழ் சொலிடாரிட்டி நின்றபடியால் அத்தகைய நடவடிக்கை அனுமதிக்கப்படவில்லை. இன்னுமொரு இடத்தில் போராட்டம் நடந்த படியால் அனாவசிய மோதலை தவிர்க்க கூடியாதாக இருந்தது.  

மக்கள் கொந்தளிக்கும் வேளையில் மக்களை இணைக்க முடியாதவர்கள்,  தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை எவ்வாறு போராடி பெறப்போகிறார்கள்.  இடதுசாரி எனக் கூறும் JVP கட்சியினரிமிருந்து தமிழ் பேசும் மக்களின் தேசிய உரிமையை மட்டுமல்ல எந்த சனநாயக உரிமைகளையும் எதிர்பார்க்க முடியாது என்பது தெட்டதெளிவாகியது. 

மதன். 

[robo-gallery id=”6853″]